காதலுக்கு எதிர்ப்பு : காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடி


காதலுக்கு எதிர்ப்பு :  காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடி
x

பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் திருமணம் செய்து கொண்டு காவல் நிலையத்தில் காதலர்கள் தஞ்சம் அடைந்தனர்.

ஈரோடு

விழுப்புரம் மாவட்டம் நொன்னைய வாடியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி.இவரது மகள் அகிலா(வயது 19). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.ஏ.தமிழ் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.கோபி அருகே உள்ள நஞ்சகவுண்டன் பாளையம் புதுக்காட்டை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் சதீஸ்குமார்(27). சதீஸ்குமார் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

சதீஸ்குமார் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் விழுப்புரத்தில் நடைபெற்ற நண்பரின் திருமணத்தில் கலந்து கொள்ள சென்றுள்ளார்.அப்போது அங்கு வந்த அகிலாவிற்கும் சதீஸ்குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதில் கடந்த 2 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இவர்களது காதல் அகிலாவின் வீட்டிற்கு தெரிய வந்ததும் எதிர்ப்பு கிளம்பியது.அதனால் வீட்டை விட்டு வெளியேறிய அகிலா கோபிக்கு சென்று காதலனை சந்தித்து உள்ளார்.

அதைத்தொடர்ந்து இருவரும் ஈரோடு அருகே உள்ள அவல் பூந்துறையில் கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு கோபி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் இருதரப்பின் பெற்றோரையும் அழைத்தனர்.

ஆனால் அகிலாவின் பெற்றோர் வராத நிலையில் சதீஸ்குமாரின் பெற்றோர் இவர்களது திருமணத்தை ஏற்றுக்கொண்டதால் காதல் ஜோடி சதீஸ்குமாரின் வீட்டிற்கு சென்றனர்.


Next Story