சென்னை ஐகோர்ட்டின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க சட்டசபையில் தீர்மானம் -ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை ஐகோர்ட்டின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க சட்டசபையில் தீர்மானம் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
சென்னை ஐகோர்ட்டின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்கும் திட்டத்தை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால், அதை செயல்படுத்த முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் முடிவு என்பது நீண்ட நாட்களுக்கு முந்தையது என்பதாலும், அதன்பின் சூழ்நிலை மாறியிருப்பதாலும் தமிழை ஐகோர்ட்டின் அலுவல் மொழியாக்கும் முயற்சி மீண்டும் தொடங்கப்படவேண்டும்.
மாநிலங்களவையில் இதுதொடர்பான கேள்விக்கு, எழுத்து மூலம் பதிலளித்த மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ, சென்னை ஐகோர்ட்டு மட்டுமின்றி, கர்நாடகம், குஜராத், சத்தீஸ்கர், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களின் உயர்நீதிமன்றத்திலும் மாநில மொழிகளை அலுவல் மொழியாக்கவேண்டும் என்ற கருத்துரு பற்றி சுப்ரீம் கோர்ட்டிடம் கருத்து கேட்கப்பட்டதாகவும், ஆனால், அந்தக் கருத்துருவை ஏற்க சுப்ரீம் கோர்ட்டின் முழு அமர்வு மறுத்து விட்டதாகவும் தெரிவித்தார். அதனால்தான் மாநில மொழிகளை ஐகோர்ட்டு அலுவல் மொழியாக்க இயலவில்லை என்றும் கூறினார். மத்திய அரசு மற்றும் சுப்ரீம் கோர்ட்டின் நிலைப்பாடுகள் மாநில மொழிகளுக்கு எதிரானவை ஆகும்.
சென்னை ஐகோர்ட்டின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்கவேண்டும் என்று தற்போது நடைபெற்று வரும் சட்டசபை கூட்டத்தில் மீண்டும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கவேண்டும். தமிழ்நாட்டிலிருந்து அரசியல் கட்சித்தலைவர்கள் அடங்கிய குழுவை அனுப்பி பிரதமரையும், மூத்த வக்கீல்கள் குழுவை அனுப்பி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியையும் சந்தித்து இந்தக்கோரிக்கையை வலியுறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






