நாடாளுமன்றத்திலேயே கருத்துரிமையின் கழுத்து நெரிக்கப்பட்டுள்ளது.! முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


நாடாளுமன்றத்திலேயே கருத்துரிமையின் கழுத்து நெரிக்கப்பட்டுள்ளது.! முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 11 Dec 2023 3:24 PM GMT (Updated: 11 Dec 2023 4:31 PM GMT)

நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி. அப்துல்லாவின் பேச்சு அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று மாநிலங்களவையில் தி.மு.க எம்.பி. அப்துல்லா, ஜம்மு காஷ்மீர் பிரச்சனை குறித்து பேசினார்.

அப்போது அவர், "ஒவ்வொரு இனத்துக்கும் தங்கள் சொந்த விதியை தாங்களே நிர்ணயிக்கும் உரிமை இருக்கிறது. காஷ்மீர் மக்களுக்கும் அது பொருந்தும்' என சொன்னவர் தந்தை பெரியார்."என பேசினார். இதற்கு நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மத்திய மந்திரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே அப்துல்லாவின் இப்பேச்சு அவை குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் அப்துல்லாவின் பேச்சு அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது;

மாநிலங்களவையில் திமுக எம்.பி., அப்துல்லா உரையாற்றும்போது சுட்டிக்காட்டிய தந்தை பெரியாரின் மேற்கோளுக்கு பா.ஜ.க.வினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெரியாரின் பெயரும் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்திலேயே கருத்துரிமையின் கழுத்து நெரிக்கப்பட்டுள்ளது. மண்டல் ஆணையப் பரிந்துரையை அமல்படுத்தியபோது தந்தை பெரியார்தான் இதற்குக் காரணம் என்று பிரதமர் வி.பி.சிங் பேசிய நாடாளுமன்றத்தில் தந்தை பெரியார் பெயர் நீக்கப்பட்டுள்ளது அவமானம்.

மக்களின் மனங்களில் நிலைத்து நின்று, வகுப்புவாதிகளை இன்றளவும் அச்சுறுத்தும் தந்தை பெரியாரின் பெயரை எங்கும் - எப்போதும் - எந்தச் சூழலிலும் பயன்படுத்துவோம்! அனைவரும் பயன்படுத்துங்கள்."

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


Next Story