'உழைப்பு, விடாமுயற்சிக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஆர்.எம்.வீரப்பன்' - டி.டி.வி.தினகரன் இரங்கல்


உழைப்பு, விடாமுயற்சிக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஆர்.எம்.வீரப்பன் - டி.டி.வி.தினகரன் இரங்கல்
x

துணிவு, கடின உழைப்பு, விடாமுயற்சிக்கு எடுத்துக் காட்டாக திகழ்ந்தவர் ஆர்.எம்.வீரப்பன் என டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு முன்னாள் அமைச்சரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பன் காலமானார். அவருக்கு வயது 98. வயது மூப்பு காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த ஆர்.எம்.வீரப்பனுக்கு இன்று காலை மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆர்.எம்.வீரப்பன், சிகிச்சை பலனளிக்காமல் இன்று பிற்பகல் உயிரிழந்தார். ஆர்.எம்.வீரப்பன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது;-

"பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் நம்பிக்கைக்குரிய தலைவராக இருந்தவரும், எம்.ஜி.ஆர் கழகத் தலைவருமான மூத்த அரசியல்வாதி ஆர்.எம்.வீரப்பன் உடல்நலக்குறைவால் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.

நாடகத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்து துணிவு, கடின உழைப்பு, விடாமுயற்சிக்கு எடுத்துக் காட்டாக திகழ்ந்து உச்சம் தொட்ட ஆர்.எம்.வீரப்பனை இழந்துவாடும் எம்.ஜி.ஆர் கழகத்தினருக்கும், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்."

இவ்வாறு டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.


Next Story