தேனி மாவட்டத்தில் சாலை விபத்து: உயிரிழந்த 6 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம்


தேனி மாவட்டத்தில் சாலை விபத்து: உயிரிழந்த 6 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம்
x

தேனி மாவட்டத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்த 6 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் குறுவட்டம், பாலாமடை கிராமத்தில் இருந்து திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, கேரளாவின் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள தனியார் எஸ்டேட்டை நோக்கி கடந்த ஏப்ரல் 22-ந் தேதியன்று சிலர் வேனில் சென்றனர்.

அப்போது தேனி மாவட்டம் போடிமெட்டு அருகே உள்ள தோன்றிமலையில் அவர்கள் சென்ற வேன் எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது. அதில், கல்குறிச்சி செல்லத்துரையின் மனைவி வள்ளியம்மாள் (வயது 70), மேலப்பாலாமடை ஆறுமுகத்தின் மனைவி ஜானகி (65), பாலாமடை இந்திரா நகர் செல்லையாவின் மகன் பெருமாள் (58), கொடியங்குளம் சுதா (25), கல்குறிச்சி சுடர்ஒளியின் மகன்கள் சுசிந்திரன் (8) மற்றும் சுரேந்திரன் (6) ஆகியோர் உயிரிழந்தனர்.

தலா ரூ.2 லட்சம்

இந்த துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். இவ்விபத்தில் பலத்த காயமடைந்து தேனி மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவரும் சுடர்ஒளியின் மனைவி சீதாலெட்சுமி மற்றும் பெருமாளின் மனைவி இந்திராணி ஆகியோருக்கு சிறப்பான சிகிச்சை வழங்க அறிவுறுத்தியுள்ளேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், பலத்த காயமடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் இருவருக்கு தலா ரூ.50 ஆயிரமும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து நிதி உதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story