செஞ்சி அருகே வெடி வைத்து பாறை தகர்ப்பு: கிராம மக்கள் சாலை மறியல்

செஞ்சி அருகே வெடி வைத்து பாறை தகர்க்கப்பட்டது. இதையடுத்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
செஞ்சி,
திண்டிவனத்தில் இருந்து திருவண்ணாமலை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. இதில் ஒரு பகுதியாக செஞ்சி அருகே நாட்டார்மங்கலம் கூட்டு ரோடு அருகே புதிய பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. அந்த பாலத்தின் அருகே இருந்த பாறையை நேற்று மாலை வெடிவைத்து தகர்த்தனர்.
அப்போது, அதன் அருகே இருந்த மின்மாற்றி மீது வெடி பட்டு, அந்த பகுதியில் மின்சாரம் தடை ஏற்பட்டது. மேலும் கற்கள் அருகே இருந்த கடைகள் மீதும் சிதறி விழுந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அந்த பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த செஞ்சி போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து கலைந்து போக செய்தனர். இதனால் அந்த பகுதியில் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.மேலும் 3 மணி நேரத்துக்கு பின்னரே அந்த பகுதிக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டது.






