ஆமை வேகத்தில் நடக்கும் நெடுஞ்சாலைத்துறை விரிவாக்க பணி

திருப்பூரில் ஆமை வேகத்தில் நடக்கும் நெடுஞ்சாலைத்துறை விரிவாக்க பணியால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.
ஆமை வேகத்தில் பணிகள்
திருப்பூர் பனியன் ஏற்றுமதி நகரமாகும். குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி அடைந்த இந்த நகரத்தின் சிறப்பு வரும் அனைவருக்கும் வேலை வாய்ப்பு கொடுப்பது ஆகும். டாலர் சிட்டி என்ற பெருமையாக இருந்தாலும். இந்த நகரம் அடையும் வளர்ச்சிக்கு ஈடாக அரசு தரப்பில் கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படுவதில்லை. இங்கு நடைபெறும் அனைத்து வளர்ச்சிப் பணிகளும் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் வாகன ஓட்டிகளும், தொழில்துறையினரும், பொதுமக்களும் பல்வேறு இன்னலுக்கு ஆளாகிறார்கள்.
கொரோனா கால ஊரடங்கு, நூல் விலை ஏற்றம், பனியன் தொழில் மந்தம் என பல்வேறு இன்னல்களில் தொழில் துறையினர் சந்தித்து வருகிறார்கள். இதற்கு இடையில் நெடுஞ்சாலை துறை சார்பாக விரிவாக்க பணி என்ற பெயரில் திருப்பூர் காங்கயம் கிராஸ் ரோடு (சி.டி.சி. கார்னர் முதல் கோட்டை மாரியம்மன் கோவில் வரையும்), தாராபுரம் கிராஸ் ரோடு (பழைய பஸ்நிலையம் முதல் தெற்கு ேபாலீஸ் நிலையம் வரை) சாலையை விரிவாக்கம் செய்ய ஆக்கிரமிப்பை அகற்றி சாலையை அகலப்படுத்தி கழிவுநீர் கால்வாய் கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த பணியானது ஆமை வேகத்தில் நடைபெறுகிறது.
பெரும் சிக்கல்
இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது:-
உள்கட்டமைப்பு பணிகள் பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்தாலும் பணிகளை முழுமை படுத்தாமல் பல இடங்களில் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. பல இடங்களில் நடைபெற்று வரும் பணிகள் வருட கணக்காக இழுத்துக் கொண்டு செல்கிறது.
அவசரமாக பணியை தொடங்கி பாதி பகுதியை இடித்து விட்டு மீதி பகுதியை பணி தொடங்காமல் விடுவதால் வாகனங்கள் செல்வதிலும், வாகனங்கள் நிறுத்துவதிலும், வணிகம் செய்வதிலும், பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்புகள்
உதாரணமாக காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ- மாணவிகள், வேலைக்கு செல்லும் பொதுமக்கள் அனைவரும் குறுகிய பாதையில் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி மணிக்கணக்காக காத்துக்கிடந்து செல்ல வேண்டிய இடத்திற்கு கால தாமதமாக சென்று அடைகிறார்கள்.
இதனால் கால விரையம், பண விரையம், வர்த்தகம் முடக்கம் நாள்தோறும் இன்னல்கள் தொடர்கிறது. அரசு இதனை கவனத்தில் கொண்டு உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலை விரிவாக்கத்தை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்பதை திருப்பூர் பொதுமக்களின் முக்கிய வேண்டுகோள் ஆகும்.






