அதம்பை கிராம மக்கள் சாலை மறியல்


அதம்பை கிராம மக்கள் சாலை மறியல்
x

புதிதாக உருவாக்கப்பட உள்ள திருவோணம் தாலுகாவில் அதம்பை கிராமத்தை சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தஞ்சாவூர்

ஒரத்தநாடு;

புதிதாக உருவாக்கப்பட உள்ள திருவோணம் தாலுகாவில் அதம்பை கிராமத்தை சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவோணம் தாலுகா

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவில் உள்ள திருவோணத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய தாலுகா உருவாக்கப்படும் என்று தமிழக வருவாய்த் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் சட்டசபையில் அறிவித்தார்.இதைத்தொடர்ந்து புதிய தாலுகாவை நடைமுறைப்படுத்தும் பணிகளில் வருவாய்த் துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு புதிதாக உருவாக்கப்பட உள்ள திருவோணம் தாலுகாவில் தற்போது பட்டுக்கோட்டை தாலுகாவில் இருக்கும் திருவோணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அதம்பை வருவாய் கிராமத்தையும் சேர்க்கும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

சாலை மறியல்

இதற்கு அக்கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதம்பை வருவாய் கிராமத்தை திருவோணம் தாலுகாவில் இணைக்க கூடாது, தொடர்ந்து பட்டுக்கோட் டை தாலுகாவிலேயே தொடர விரும்புவதாக கூறி அதம்பை கிராம மக்கள் நேற்று காலை நம்பிவயல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே பட்டுக்கோட்டை- செங்கிப்பட்டி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இது குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஒரத்தநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், பட்டுக்கோட்டை தாசில்தார் ராமச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் தொடர்புடைய கிராம மக்களில் சிலரை பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அதிகாரிகள் பட்டுக்கோட்டை தாசில்தார் அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். இதைத்தொடர்ந்து கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story