பணிநீக்கபணிக்காலமாக அறிவிக்க சாலை பணியாளர்கள் வேண்டுகோள்


பணிநீக்கபணிக்காலமாக அறிவிக்க சாலை பணியாளர்கள் வேண்டுகோள்
x

பணிநீக்கபணிக்காலமாக அறிவிக்க சாலை பணியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பெரம்பலூர்

கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் கவன ஈர்ப்பு விளக்க கூட்டம் நேற்று மதியம் நடந்தது. நெடுஞ்சாலைத்துறை பெரம்பலூர் கோட்ட பொறியாளர் அலுவலக வளாகத்தில் நடந்த இந்த கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுப்ரமணியன் சங்கத்தின் கோரிக்கைகளை விளக்கி பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் குமரி அனந்தன், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் மரியதாஸ், கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் மாநில துணை தலைவர் சிவகுமார், தூய்மை பாரத இயக்கத்தின் வட்டார ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள், சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை தமிழக அரசு பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். சாலை பணியாளர்களுக்கு தொழில்நுட்ப கல்வித்திறன் பெறாத ஊழியர்களுக்கான ஊதிய மாற்றம் ரூ.5,200, ரூ.20,200, தர ஊதியம் ரூ.1,900 என நிர்ணயம் செய்து ஊதிய அந்தஸ்தை உயர்த்தி வழங்க வேண்டும். பணி நீக்க காலத்திலும், பணிக்காலத்திலும் இறந்த சாலை பணியாளர்களின் வாரிசுகளில் கருணை அடிப்படையில் பணி நியமனம் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு விரைந்து பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். முன்னதாக சங்கத்தின் 23-வது ஆண்டு அமைப்பு தின விழாவினை முன்னிட்டு அலுவலகம் முன்பு சங்க கொடி ஏற்றப்பட்டு, சிறப்பு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.


Next Story