தொழிற்சங்கத்தினர் சாலை மறியல்


தொழிற்சங்கத்தினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 24 Jan 2023 7:30 PM GMT (Updated: 24 Jan 2023 7:31 PM GMT)

திருச்செங்கோட்டில் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற் சங்கத்தினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களில் 550 பேர் கைது செய்யப்பட்டனர்.

நாமக்கல்

எலச்சிபாளையம்:-

திருச்செங்கோட்டில் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற் சங்கத்தினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களில் 550 பேர் கைது செய்யப்பட்டனர்.

சாலை மறியல்

44 தொழிலாளர் சட்டங்களை 4 சட்டங்களாக சுருக்கி தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து ஏ.ஐ.டி.யு.சி. நாமக்கல் மாவட்ட குழு சார்பில் திருச்செங்கோடு பழைய பஸ் நிலையம் அருகில் சாலைமறியல் போராட்டம் நடந்தது.

ஏ.ஐ.டி.யு.சி. மாநில செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயராமன், மாவட்ட பொதுச் செயலாளர் தனசேகரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் அன்புமணி, ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட குழு செய்திபிரிவு செயலாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

550 பேர் கைது

மறியல் போராட்டத்தின் போது, அரசு பணிகளில் 240 நாட்கள் பணிபுரிந்த அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். எந்த தொழில் அல்லது பணி புரிந்தாலும் ரூ.21 ஆயிரத்துக்கும் குறைவான சம்பளம் வழங்க வேண்டும். தொழிலாளர் நல வாரியங்களில் ரூ.6 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள தொழிலாளர் நலவாரிய ஓய்வூதியத்தை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

போராட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஜெயராமன், மாவட்ட கட்டிட சங்க தலைவர் நந்தகுமார், மாவட்ட கட்டிட சங்க செயலாளர் குமார். ஏ.ஐ.டி.யு.சி. போக்குவரத்து செயலாளர் செல்வராஜ், விவசாயிகள் சங்க செயலாளர் நல்லப்பன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் சுகுமார், மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. பொருளாளர் பாலசுப்பிரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மறியலில் ஈடுபட்ட 150 பெண்கள் உள்பட 550 பேரை போலீசார் கைது செய்து கொங்கு வேளாளர் சமுதாய நலக்கூடத்தில் தங்க வைத்தனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.


Next Story