நகைக்கடையின் ஷட்டரை துளையிட்டு 9 கிலோ தங்கம் கொள்ளை - சென்னையில் துணிகர சம்பவம்


நகைக்கடையின் ஷட்டரை துளையிட்டு 9 கிலோ தங்கம் கொள்ளை - சென்னையில் துணிகர சம்பவம்
x

பெரம்பூரில் நகைக்கடையின் ஷட்டரை துளையிட்டு 9 கிலோ தங்கத்தை கொள்ளையர்கள் கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.

சென்னை,

சென்னை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் வசித்து வருபவர் ஸ்ரீதர்(36). இரண்டு மாடிகள் கொண்ட இவரது வீட்டில் இரண்டாவது தளத்தில் ஸ்ரீதர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். முதல் தளத்தில் ஜே.எல்.கோல்ட் பேலஸ் என்ற பெயரில் கடந்த 8 வருடங்களாக நகைக்கடை நடத்தி வருகிறார்.

இந்தநிலையில் நேற்று இரவு நகைக்கடையில் வியாபாரம் முடிந்து ஊழியர் கடையை பூட்டி சாவியை ஸ்ரீதரிடம் கொடுத்துவிட்டுச் சென்றனர். இன்று காலை 9 மணியளவில் ஸ்ரீதர் கடையை திறப்பதற்காக வந்தபோது கடையின் முன்பக்க ஷட்டர் வெல்டிங் மிஷினை பயன்படுத்தி ஓட்டை போட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

அதையடுத்து கடைக்குள் சென்ற பார்த்த உரிமையாளர் ஸ்ரீதருக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. கடையின் உள்ளே இருந்த லாக்கர் ரூம் கதவை கொள்ளையர்கள் வெல்டிங் மிஷினால் உடைத்து உள்ளே இருந்த 9 கிலோ தங்க நகைகள், 20 லட்சம் மதிப்புள்ள வைரங்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. மேலும் கடையில் இருந்த சிசிடிவி கேமரா உள்ளிட்டவற்றை கொள்ளையர்கள் எடுத்துச் சென்றது தெரியவந்தது.

உடனே ஸ்ரீதர் திருவிக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story