கோவில் திருவிழாவை முன்னிட்டு சண்டைக்கு தயாராகும் சேவல்கள்

வேடசந்தூர் பகுதியில் கோவில் திருவிழாவை முன்னிட்டு சண்டைக்கு சேவல்களை தயார்ப்படுத்தி வருகின்றனர்.
சேவல்களுக்கு பயிற்சி
வைகாசி மாதத்தில் பெரும்பாலான கிராமங்களில் கோவில் திருவிழாக்கள் நடத்தப்படுவது வழக்கம். வேடசந்தூர் பகுதியில் கோவில் திருவிழாவையொட்டி கத்திகளை கட்டாமல் சேவல் சண்டை நடத்தப்படுகிறது.
இதில் வெற்றி பெற்ற சேவலின் உரிமையாளர், தோல்வி அடைந்த சேவலை வீட்டுக்கு எடுத்துச்சென்று சமைத்து சாப்பிடுவார்கள். தற்போது கோவில் திருவிழாவுக்காக சண்டைக்கு தயார் செய்ய 21 நாட்கள் சேவல்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
உணவு வகைகள்
பயிற்சியின் போது, சண்டை சேவல்களுக்கு தரும் உணவு வகைகளே மிகவும் பிரமிப்பாக இருக்கும். இதுகுறித்து சண்டை சேவல் வளர்ப்பவர்கள் கூறியதாவது:-
21 நாள் பயிற்சியில் ஒரு சேவல் ஒன்றரை கிலோ பாதாம் பருப்பு சாப்பிட்டு விடும். தினமும் 3 முட்டை, நியூரோபியன், ரிவிட்டால் சத்து மாத்திரைகள், கேப்பை, கம்பு, உளுந்து, பாசிப்பயறு, கானம், நத்தசூரிவிதை, வெந்தயம், மிளகு இவற்றை மாவு போல் அரைத்து உணவாக தினமும் வழங்கப்படும். இதுதவிர ஒரு நாள் விட்டு, ஒரு நாள் 25 நிமிடம் நீச்சல் பயிற்சி அளிக்கப்படும். இவையில்லாமல் இறக்கை தேய்ப்பு, நெஞ்சு தேய்ப்பு போன்ற உடற்பயிற்சிகள் தினமும் நடக்கும்.
பயிற்சி முடிந்ததும் தினமும் ஆட்டு சுவரொட்டி அல்லது மாட்டு சுவரொட்டி சேவலுக்கு வழங்கப்படும். அதேபோல் ஆட்டு எலும்பு மூட்டு வாங்கி இடித்து, மாவுடன் கலந்து சேவலுக்கு ஊட்டுவார்கள். இவ்வாறு பல்வேறு சத்தான உணவு வகைகள் அளிக்கப்படுகிறது.
மூலிகை இலை குளியல்
போட்டிக்கு 2 நாட்களுக்கு முன்பு வேப்பஇலை, நொச்சிஇலை, தும்பை இலை, யூக்லிப்டஸ், துளசி போன்ற மூலிகை இலைகளை நீரில் போட்டு கொதிக்க வைக்கப்படும். பின்னர் அந்த ஆற வைத்த அந்த நீரில் மஞ்சள் பொடி கலந்து சேவலை குளிக்க வைப்பார்கள்.
அதன் பின் ஷாம்பு போட்டு சேவலை குளிக்க வைத்து உலர வைப்பார்கள். இதன் பிறகு களம் இறங்கும் சேவல் எதிர்த்து நிற்கும் சேவலை பதம் பார்க்கும். இவ்வாறு சேவல் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.