செண்டுமல்லி பூச்செடிகளை டிராக்டரால் அழித்த விவசாயிகள்


செண்டுமல்லி பூச்செடிகளை டிராக்டரால் அழித்த விவசாயிகள்
x
தினத்தந்தி 27 Sep 2022 6:45 PM GMT (Updated: 27 Sep 2022 6:46 PM GMT)

பெரும்பாலை அருகே போதிய விலை கிடைக்காத விரக்தியில் செண்டுமல்லி பூச்செடிகளை விவசாயிகள் டிராக்டர் மூலம் அழித்தனர்.

தர்மபுரி

ஏரியூர்:

பெரும்பாலை அருகே போதிய விலை கிடைக்காத விரக்தியில் செண்டுமல்லி பூச்செடிகளை விவசாயிகள் டிராக்டர் மூலம் அழித்தனர்.

பூக்கள் அறுவடை

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள பெரும்பாலை நாகாவதி அணை பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் சாமந்தி, செண்டுமல்லி பூக்கள் சாகுபடி செய்துள்ளனர். இந்த பூக்கள் அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விவசாயிகள் பூக்களை அறுவடை செய்து தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.

தற்போது விளைச்சல் அதிகரிப்பால் மார்க்கெட்டுகளுக்கு செண்டுமல்லி பூக்கள் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பூக்கள் விலை வீழ்ச்சி அடைந்து ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பூக்களை பறிக்கும் கூலிக்கு கூட விற்பனை ஆகாததால் விவசாயிகள் செண்டுமல்லி பூச்செடிகளை டிராக்டர் மூலம் அழித்து வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

விலை வீழ்ச்சி

பெரும்பாலை பகுதி பொதுவாக சிறு குறு விவசாய பகுதியாகவே உள்ளது. இந்த பகுதியில் பாசன வசதி இல்லாததால் வானம் பார்த்த பூமியாகவே உள்ளது. இந்த பகுதியில் ராகி, கம்பு, கேழ்வரகு, நிலக்கடலை போன்ற பயிர்கள் மட்டுமே அதிக அளவில் சாகுபடி செய்யப்படும். இந்த பகுதியில் பெய்த பருவமழை காரணமாக ஏரி, குளம், கிணறு உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பின. இதனால் விவசாயிகள் மாற்று பயிராக பூக்கள் சாகுபடி செய்துள்ளனர்.

பெரும்பாலை பகுதியில் இருந்து சாமந்தி, செண்டுமல்லி உள்ளிட்ட பூக்கள் விளைச்சல் அமோகமாக உள்ளது. இதனால் இந்த பூக்களை அறுவடை செய்து தர்மபுரி, சேலம், பெங்களூரு, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகளில் விற்பனை செய்து வருகிறோம். தற்போது மார்க்கெட்டுக்கு செண்டுமல்லி பூக்கள் வரத்து அதிகரித்து உள்ளதால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

இழப்பீடு

இதனால் போதிய விலை கிடைக்காத விரக்தியில் செண்டு மல்லி பூக்களை பெரும்பாலான விவசாயிகள் பறிக்காமல் தோட்டத்திலேயே விட்டு உள்ளனர். ஒரு சில விவசாயிகள் மாற்று பயிர் செய்ய செண்டுமல்லி பூச்செடிகளை டிராக்டர் மூலம் அழித்து வருகின்றனர். எனவே பாதிக்கப்பட்ட பூ விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story