காசிமேட்டில் நண்பர்களுடன் மது அருந்திய ரவுடி மர்மசாவு


காசிமேட்டில் நண்பர்களுடன் மது அருந்திய ரவுடி மர்மசாவு
x

காசிமேட்டில் நண்பர்களுடன் மது அருந்திய ரவுடி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுக்குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை

சென்னை தண்டையார்பேட்டை விநாயகபுரம் 10-வது தெருவைச் சேர்ந்தவர் ராஜா என்ற திருட்டு ராஜா (வயது 38). எர்ணாவூர் நேதாஜி நகர் சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் தேசிங்கு (30). காசிமேடு ஜீவரத்தினம் பகுதியைச் சேர்ந்தவர் குகன் (27). குற்ற வழக்குகளில் தொடர்புடைய இவர்கள் 3 பேரும் ரவுடிகள் ஆவர்.

இவர்கள், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் பழைய மீன் ஏலம் விடும் இடத்தில் அமர்ந்து மது குடித்தனர். அப்போது அந்த வழியாக காசிமேடு மீன்பிடி துறைமுக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் ரோந்து சென்றார். போலீசாரை பார்த்ததும் அங்கு மது குடித்து கொண்டிருந்த இருவரும், திருட்டு ராஜா மயக்கம் அடைந்து கிடப்பதாக போலீசாரிடம் தெரிவித்தனர். அங்கு சென்று போலீசார் பார்த்தபோது திருட்டு ராஜா இறந்து கிடந்தார். அவரது உடலில் லேசான சிராய்ப்பு காயங்கள் இருந்தன.

இதையடுத்து போலீசார் திருட்டு ராஜா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவுடி திருட்டு ராஜாவின் மர்ம சாவுக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக குகன், தேசிங்கு ஆகிய 2 பேரையும் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story