மேட்டூர் அருகே இரவில் பயங்கரம்: ரவுடி வெட்டிக்கொலை-2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு


மேட்டூர் அருகே இரவில் பயங்கரம்: ரவுடி வெட்டிக்கொலை-2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 28 Jun 2023 10:07 PM GMT (Updated: 29 Jun 2023 7:36 AM GMT)

மேட்டூர் அருகே இரவில் ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவரை வெட்டி கொன்று விட்டு தப்பி ஓடிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சேலம்

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே கருமலைக்கூடல் பகுதியை சேர்ந்தவர் சிபி (வயது 24). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. ரவுடியான இவர் நேற்று இரவு 10 மணியளவில் புதுச்சாம்பள்ளி ரெயில்வே தண்டவாளம் பகுதியில் தனியாக இருந்தார்.

அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் தாங்கள் வைத்திருந்த அரிவாளால் அவரை சரமாரியாக ெவட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயம் அடைந்த சிபி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

இந்த கொலை குறித்து தகவல் கிடைத்ததும் கருமலைக்கூடல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர். அப்போது அங்கு வந்த சிபியின் பெற்றோர் கொலையாளிகளை கைது செய்யும் வரை அவரது உடலை போலீசார் கொண்டு செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று வாக்குவாதம் செய்தனர். பின்னர் போலீசாரின் சமரசத்தை அடுத்து சிபியின் உடல் பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

மேலும் அவர் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது குறித்து கருமலைக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மேட்டூர் அருகே நேற்று இரவு பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story