மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கியதாக ரூ.1 கோடி மோசடி; கூட்டுறவு வங்கி பெண் அதிகாரி கைது


மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கியதாக ரூ.1 கோடி மோசடி; கூட்டுறவு வங்கி பெண் அதிகாரி கைது
x
தினத்தந்தி 1 Jun 2022 12:57 AM GMT (Updated: 1 Jun 2022 1:08 AM GMT)

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கியதாக ரூ.97 லட்சம் மோசடி செய்த கூட்டுறவு வங்கி பெண் மேலாளர் கைது செய்யப்பட்டார்.


வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கிளை குடியாத்தத்தில் அமைந்துள்ளது. இங்கு 2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் மேலாளராக பணியாற்றி வந்தவர் உமாமகேஸ்வரி (வயது 38). இவர் பணியாற்றிய காலத்தில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கியதாக போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.97 லட்சத்து 37 ஆயிரம் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து துறை உயர் அலுவலர்களுக்கு புகார்கள் சென்றது. அதையடுத்து குடியாத்தம் வங்கியில் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவில் உமாமகேஸ்வரி பணமோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

பெண் மேலாளர் கைது

அதைத்தொடர்ந்து கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர் அருட்பெருஞ்ஜோதி, வேலூர் மாவட்ட வணிக குற்றப்புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். பின்னர் உமாமகேஸ்வரியை போலீசார் கைது செய்தனர்.

உமாமகேஸ்வரி தற்போது வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் மேலாளராக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது. கூட்டுறவு வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் முறைகேட்டில் ஈடுபட்ட பெண் மேலாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story