திருமுல்லைவாயல் அருகே போலி ஆவணங்கள் மூலம் ரூ.1 கோடி நிலம் மோசடி - ஒருவர் கைது


திருமுல்லைவாயல் அருகே போலி ஆவணங்கள் மூலம் ரூ.1 கோடி நிலம் மோசடி - ஒருவர் கைது
x

திருமுல்லைவாயல் அருகே போலி ஆவணங்கள் மூலம் ரூ.1 கோடி மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.

சென்னை

திருமுல்லைவாயல் அடுத்த உப்பரபாளையம் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர்கள் எல்லப்பபிள்ளை மற்றும் குணசுந்தரி (வயது 66). அதே பகுதியில் இவர்களுக்கு சொந்தமான சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள 56 சென்ட் நிலத்தை அந்த பகுதியைச் சேர்ந்த குப்பன்(47), சாந்தி, எல்லம்மாள், இந்திரா, ராமச்சந்திரன், சேகர் ஆகியோர் ஆள் மாறாட்டம் மூலம் கூட்டு சதி செய்து போலி ஆவணம் தயாரித்து கோதண்டம் என்பவருக்கு அதிகார பத்திரம் செய்து கொடுத்துள்ளனர்.

கோதண்டம், அந்த இடத்தை போலி ஆவணங்கள் தயார் செய்து வீட்டு மனைகளாக பிரித்து விற்பனை செய்தார். இதையறிந்த எல்லப்பபிள்ளை, குணசுந்தரி ஆகியோர் தங்கள் இடத்தை போலி ஆவணம் தயாரித்து மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தனர்.

இதையடுத்து ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் பொன்சங்கர் மேற்பார்வையில் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் இந்த மோசடி தொடர்பாக நேற்று குப்பனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story