திருநங்கைகள் சொந்தமாக ஆட்டோ, கார் வாங்க ரூ.1 லட்சம் மானியம்


திருநங்கைகள் சொந்தமாக ஆட்டோ, கார் வாங்க ரூ.1 லட்சம் மானியம்
x
தினத்தந்தி 2 Sep 2023 6:45 PM GMT (Updated: 2 Sep 2023 6:46 PM GMT)

தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள திருநங்கை ஓட்டுனர்கள் சொந்தமாக ஆட்டோ, கார்(டாக்சி) வாங்க ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்பட உள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர்(சமூக பாதுகாப்பு திட்டம்) பழனி தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர்(சமூக பாதுகாப்பு திட்டம்) பழனி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அமைப்புசாரா தொழிலாளர்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாதையோர வணிகர்கள், அமைப்புசாரா ஓட்டுனர்கள் மற்றும் கட்டுமான தொழில்புரியும் தொழிலாளர்களை தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தின் கீழ் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.நலவாரியங்களில் பதிவு செய்து உறுப்பினரான தொழிலாளர்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, கண்கண்ணாடி, மாத ஓய்வூதியம், இயற்கை மரணம் மற்றும் விபத்து மரணம் உள்ளிட்டவற்றுக்கு நிதியுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு கூட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தியதன் பேரில் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகில் உள்ள வளாகம் மற்றும் உளுந்தூர்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலக கூட்ட அரங்கு ஆகிய இடங்களில் முகாம் நடத்தப்பட்டது.

174 பேருக்கு அடையாள அட்டை

இதில் பாதையோர வணிகர்கள், அமைப்புசாரா ஓட்டுனர்கள் மற்றும் கட்டுமான தொழில் புரியும் தொழிலாளர்களை அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தின் கீழ் உறுப்பினராக இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டது. இந்த முகாமில் பாதை யோர வியாபாரிகள் 5 பேர், அமைப்புசாரா ஓட்டுனர்கள் 48 பேர் மற்றும் கட்டுமான தொழில் புரியும் தொழிலாளர்கள் 74 பேர் என மொத்தம் 176 அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு உரிய அமைப்புசாரா நலவாரியத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

திருநங்கைகளுக்கும்...

தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுனர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நலவாரியத்தின் கீழ் பதிவு பெற்ற பெண் ஓட்டுனர்கள் சொந்தமாக ஆட்டோ அல்லது தொழில்முறை டாக்சி(கார்) வாங்க ரூ.1 லட்சம் மானியம் வழங்கும் திட்டத்தை பற்றியும், தற்போது இந்த திட்டத்தில் பதிவு பெற்ற திருநங்கைகளுக்கும் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே அரசின் திட்டத்தை திருநங்கை ஓட்டுனர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும், இ்வ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story