வாலிபரிடம் ரூ.11 லட்சம் மோசடி; 2 பேர் கைது


வாலிபரிடம் ரூ.11 லட்சம் மோசடி; 2 பேர் கைது
x

வாலிபரிடம் ரூ.11 லட்சம் மோசடி; 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

அரியலூர்

தாமரைக்குளம்:

ரெயில்வேயில் வேலை

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள ஜெமீன் மேலூரை சேர்ந்தவர் சிவா(வயது 35). சம்பவத்தன்று இவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், சிவாவுக்கு ரெயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.11 லட்சம் கேட்டுள்ளார். அதை நம்பிய சிவா, அந்த பணத்தை இணையவழி பரிவர்த்தனையில் கொடுத்துள்ளார்.

இதையடுத்து அவருக்கு ரெயில்வே டிக்கெட் பரிசோதனை அலுவலர் வேலை வழங்கப்பட்டதாக, ரெயில்வே லட்சினை போன்றவற்றுடன் கூடிய ஆணை வந்துள்ளது. மேலும் அவரை கொல்கத்தாவில் உள்ள ஒரு ரெயில் நிலையத்தில் குடிநீர் குழாய் சரிபார்ப்பு மற்றும் குப்பை தொட்டி பராமரிப்பு பணியை முதலில் பார்த்து கொள்ள அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து பயிற்சி வகுப்பும் நடத்தப்பட்டுள்ளது.

2 பேர் கைது

இதையடுத்து சிவாவுக்கு சுமார் 45 நாட்கள் வேலை அளிக்கப்பட்ட நிலையில், அவருக்கு சம்பளம் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர், இது குறித்து அரியலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், சிவாவுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி ேமாசடியில் ஈடுபட்டது விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சுந்தரமூர்த்தியின் மகன் தாமோதரன்(32), கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த சிவாஜி(43) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து சொகுசு கார் மற்றும் ரூ.2½ லட்சம் மதிப்பிலான நகைகள், ரூ.1 லட்சம் ரொக்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ரூ.26 லட்சம் முடக்கம்

மேலும் இவர்களிடம் நடத்திய விசாரணையில், இவர்கள் டெல்லியை சேர்ந்த மனிஷ் பாண்டேவுடன் கூட்டு சேர்ந்து சதியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை அடுத்து மணிஷ் பாண்டே வங்கி கணக்கில் இருந்த ரூ.26 லட்சம் முடக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story