சேலத்தில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் திருட்டு


சேலத்தில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் திருட்டு
x

சேலத்தில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சேலம்

ரூ.5 லட்சம் திருட்டு

சேலம் சுக்காம்பட்டி பகுதியை சேர்ந்தவர் வடிவேல் (வயது 42). இவர் வங்கிகளில் கடன் பெற்றுத்தரும் இடைத்தரகராக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது சொந்த செலவிற்காக வங்கி கணக்கில் இருந்து ரூ.5 லட்சத்தை எடுத்து அதை வீட்டின் பீரோவில் வைத்து இருந்தார்.

இந்த நிலையில் கடந்த 18-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு, ஏற்காட்டில் உள்ள அவரது மாமியாரை பார்க்க சென்றார். பின்னர் நேற்று மதியம் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டு இருந்த ரூ.5 லட்சம் திருடப்பட்டது தெரியவந்தது.

வலைவீச்சு

இதுகுறித்து அவர் வீராணம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து திருட்டு நடந்த இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, பீரோ உள்ளிட்ட இடங்களில் பதிவாகி இருந்த ரேகைகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த திருட்டு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு வீட்டின் பூட்டை உடைத்து நடந்த திருட்டு சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story