படுகொலை செய்யப்பட்ட சமூக ஆர்வலர் ஜெகநாதன் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்


படுகொலை செய்யப்பட்ட சமூக ஆர்வலர் ஜெகநாதன் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
x

லாரி ஏற்றி படுகொலை செய்யப்பட்ட சமூக ஆர்வலர் ஜெகநாதன் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

கரூர் மாவட்டம் கரூர்குப்பம் கிராமத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த கல்குவாரி குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்த ஜெகநாதன் என்ற சமூக ஆர்வலர் கொடூரமான முறையில் லாரி ஏற்றி படுகொலை செய்யப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

இயற்கை வளத்தை பாதுகாப்பதற்காக போராடிய ஒருவரை கொல்லத் துணிகிறார்கள் என்றால், அவர்களுக்கு வலிமையான பின்னணி இருப்பதாகவே தோன்றுகிறது. அதுகுறித்து விசாரணை நடத்துவதுடன், ஜெகநாதனின் படுகொலைக்கு காரணமான அனைவரையும் கைது செய்ய வேண்டும்.

கொல்லப்பட்ட சமூக ஆர்வலர் ஜெகநாதனின் குடும்பத்திற்கு பா.ம.க. சார்பில் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்; அத்துடன் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story