மணலியில் ரூ.80 கோடி அரசு நிலம் மீட்பு; சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை


மணலியில் ரூ.80 கோடி அரசு நிலம் மீட்பு; சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
x

மணலியில் ரூ.80 கோடி அரசு நிலத்தை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மீட்டனர்.

சென்னை

சென்னை மாநகராட்சி மணலி மண்டலம் 18-வது வார்டுக்கு உட்பட்ட சி.பி.சி.எல். நகர் அருகே தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் நீர்நிலை பாதைகள், சுடுகாடு போன்ற அரசுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்து இருப்பதாக கூறப்படுகிறது.

இதையடுத்து மணலி மண்டல அதிகாரிகள் இந்த நிறுவனத்தின் வருவாய் துறை ரீதியான ஆவணங்களை ஆய்வு செய்தனர். அப்போது மழைநீர் வடிகால் பாதைகள் மற்றும் நீர்நிலையை ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் அமைத்திருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து சென்னை மாநகராட்சி வடக்கு வட்டார துணை கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உத்தரவின்பேரில் மணலி மண்டல உதவி கமிஷனர் கோவிந்தராசு, உதவி செயற்பொறியாளர் தேவேந்திரன், உதவி பொறியாளர் கவிதா ஆகியோர் கொண்ட குழுவினர் சி.பி.சி.எல். நகர் அருகே தனியார் நிறுவனம் ஆக்கிரமித்து கட்டியிருந்த சுற்றுச் சுவரை இடித்து அகற்றி, அரசுக்கு சொந்தமான ரூ.80 கோடி மதிப்புள்ள சுமார் 3.3 ஏக்கர் நீர்நிலை நிலத்தை மீட்டனர்.

மீட்கப்பட்ட அந்த இடத்தில் சுமார் 30 அடி அகலம் கொண்ட மழை நீர் கால்வாய் அமைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story