ரூ.10 கோடி மாநகராட்சி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு


ரூ.10 கோடி மாநகராட்சி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
x
தினத்தந்தி 4 Oct 2023 9:45 PM GMT (Updated: 4 Oct 2023 9:45 PM GMT)

கோவை ராமநாதபுரம் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ரூ.10 கோடி மாநகராட்சி நிலம் மீட்கப்பட்டது.

கோயம்புத்தூர்

கோவை ராமநாதபுரம் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ரூ.10 கோடி மாநகராட்சி நிலம் மீட்கப்பட்டது.


ஆக்கிரமிப்பு


கோவை மாநகராட்சிக்கு சொந்தமான பல்வேறு இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலங்களை மீட்க மாநகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டு இருந்தார். இதையடுத்து மாநகராட்சியின் 5 மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்பு இடங்களை கண்டறிந்து அதனை மீட்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.


இந்த நிலையில் கோவை மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட ராமநாதபுரம் மருதூர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான 47 சென்ட் ஆக்கிரமித்து இருப்பதாகவும், அங்கு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் கட்டப்பட்டு உள்ளதாக அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உதவி நகரமைப்பு அலுவலர் சத்யா தலைமையில் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நேற்று காலை நடைபெற்றது.


காலஅவகாசம்


கோவில் அருகே சிறிய செட் அமைத்து அதில் கோவிலுக்கு தேவையான பொருட்கள் வைத்து இருந்தனர். அந்த செட் முழுவதையும் மாநகராட்சி ஊழியர்கள் இடித்து அகற்றினர். மேலும் அங்கிருந்த கட்டிடங்களும் அகற்றப்பட்டன. பின்னர் கோவிலை இடித்து அகற்ற ஊழியர்கள் முயன்றனர். இதற்கு அந்த பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கோவிலில் உள்ள 3 அம்மன் சிலைகளை தாங்களே அகற்றி கொள்வதாகவும், அதற்கு 3 நாட்கள் கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.


இதையடுத்து கோவிலில் இருந்த 3 சென்ட் நிலம் தவிர மற்ற இடங்களை மாநகராட்சி ஊழியர்கள் கையகப்படுத்தினர். தொடர்ந்து கோவிலில் உள்ள 3 சிலைகளையும் அகற்ற பொதுமக்களுக்கு 3 நாட்கள் காலஅவகாசம் வழங்கப்பட்டது.


ரூ.10 கோடி


இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-


கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட மருதூர் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்ட மாநகராட்சி இடங்கள் மீட்கப்பட்டது. இந்த நிலத்தின் மதிப்பு ரூ.10 கோடி ஆகும். கோவிலில் உள்ள சிலைகளை அந்த பகுதி பொதுமக்கள் அகற்றி கொள்ள 3 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.



Next Story