ரூ.20 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்


கும்பகோணம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.

தஞ்சாவூர்

திருப்பனந்தாள்:

வீட்டில் அதிரடி சோதனை

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சோழபுரம் உத்தமதானி கிராமத்தில் ஒரு வீட்டில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து கடைகளுக்கு வினியோகம் செய்வதாக சோழபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாபர் சித்திக் தலைமையில் இன்ஸ்பெக்டர் சர்மிளா, சப்-இன்ஸ்பெக்டர்கள் சற்குணன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், போலீஸ் ஏட்டு தேவேந்திரன் மற்றும் தனிப்படை போலீஸ்காரர் சிலம்பரசன் ஆகியோர் நேற்று மாலை உத்தமதானி கல்லூர் சாலையில் உள்ள ஒரு வாடகை வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.

ரூ.20 லட்சம் புகையிலை பொருட்கள்

அப்போது அந்த வீட்டில் ரூ.20 லட்சம் மதிப்பிலான குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மூட்டை, மூட்டையாக பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதை தொடர்ந்து 2 ஆயிரம் கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர் அந்த வீட்டில் இருந்த கும்பகோணம் அருகே உள்ள துவரங்குறிச்சியை சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் தட்சணாமூர்த்தி (வயது 28), கடிச்சம்பாடி பகுதியை சேர்ந்த ஞானசுந்தரம் மகன் ரஞ்சித் (27) ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

2 பேர் கைது; சொகுசு கார் பறிமுதல்

விசாரணையில், அவர்கள் வாடகை வீட்டில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து கடைகளுக்கு வினியோகம் செய்தது தெரிய வந்தது.

இதுதொடர்பாக சோழபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தட்சணாமூர்த்தி, ரஞ்சித் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து சொகுசு கார் மற்றும் 2 ஸ்கூட்டர்களையும் பறிமுதல் செய்தனர்.

சோழபுரம் பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான 2 ஆயிரம் கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story