தகவல் அறியும் உரிமைச்சட்ட வார விழிப்புணர்வு ஊர்வலம்


தகவல் அறியும் உரிமைச்சட்ட வார விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 12 Oct 2023 6:45 PM GMT (Updated: 12 Oct 2023 6:46 PM GMT)

முத்துப்பேட்டை அருகே தகவல் அறியும் உரிமைச்சட்ட வார விழிப்புணர்வு ஊர்வலம்

திருவாரூர்

முத்துப்பேட்டை:

தமிழக அரசு உத்தரவுபடி ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 5-ந்தேதி முதல் 12-ந் தேதி வரை தகவல் அறியும் உரிமைச்சட்டம் வாரம் கொண்டாட உத்தரவு பிறப்பித்து நடைமுறையில் இருந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்று முத்துப்பேட்டையை அடுத்த பேட்டை மீனவ கிராமத்தில் திருவாரூர் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் கடலோர பாதுகாப்பு குழுமம் இணைந்து தகவல் அறியும் உரிமைச்சட்டம் பற்றி விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருவாரூர் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் மோகன்குமார் தலைமை தாங்கினார். முன்னதாக பேட்டை கிராமம் மீன்பிடி படகு இறங்கு தளம் முதல் பேட்டை பூங்கா வழியாக பேட்டை கடலோர பாதுகாப்பு குழுமம் சோதனைச்சாவடி வரை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் பற்றியும், அதன் முக்கியத்துவம் குறித்தும், இந்த சட்டம் மூலம் பொதுமக்கள் அரசு துறையினரிடம் மனு கொடுத்து தங்களுக்கு தேவையான தகவல்கள் மற்றும் உரிமைகளை எப்படி பெறுவது? குறித்தும் விரிவாக விளக்கப்பட்டது. கூட்டத்தில் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா கிரேசி, சப்-இன்ஸ்பெக்டர் ரகுபதி, கடல் அமலாக்கப்பிரிவு போலீஸ் சுரேஷ், சாகர்மித்ரா அலுவலர்கள் ஆலன் வில்பெர்ட், ரம்யா, ஜான் பாண்டியன், பேட்டை மீனவ சங்க தலைவர் ராஜேந்திரன் மற்றும் 50-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story