ரூபி மனோகரன் இடைநீக்கம் நிறுத்திவைப்பு


ரூபி மனோகரன் இடைநீக்கம் நிறுத்திவைப்பு
x

காங்கிரஸ் எம்.எல்.ஏ ரூபி மனோகரன் இடை நீக்கம் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது.

சென்னை,

சென்னை சத்தியமூர்த்தி பவனில் கடந்த 15-ந் தேதி காங்கிரஸ் கட்சியினரிடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக கட்சியின் மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. மற்றும் எஸ்.சி. பிரிவு தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் ஆகியோருக்கு கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியது.

அதில் வருகிற 24-ந் தேதி(இன்று) சத்தியமூர்த்தி பவனில் நடைபெற உள்ள ஒழுங்கு நடவடிக்கை குழுவில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கூறப்பட்டிருந்தது.

அதன்படி, காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி. பிரிவு தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். மோதல் சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்தும், ஒழுங்கு நடவடிக்கை குழுவில் நேரில் ஆஜராக அவகாசம் கேட்டும் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கடிதம் அனுப்பி இருந்தார்.

ஆனால், ரூபி மனோகரன் சொல்லும் காரணம் ஏற்புடையது அல்ல. அடுத்த கூட்டத்தில் ஆதாரங்களுடன் நேரில் ஆஜராகி உரிய விளக்கம் அளிக்க வேண்டும். அதுவரை ரூபி மனோகரன் கட்சியில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்படுவதாக காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு அறிவித்தது.

இந்த நிலையில், காங்கிரசில் இருந்து நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ. ரூபி மனோகரனின் இடைநீக்கம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில், விதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை. எனவே, ரூபி மனோகரனுக்கு எதிரான அனைத்து ஒழுங்கு நடவடிக்கைகளையும் நிறுத்தி வைப்பதாக காங்கிரஸ் கமிட்டி தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் அறிவித்துள்ளார்.


Next Story