வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி - டெல்லி, பீகாரில் தனிப்படை தேடுதல் வேட்டை


வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி - டெல்லி, பீகாரில் தனிப்படை தேடுதல் வேட்டை
x

வடமாநில தொழிலாளர்கள் குறித்து தவறான செய்தி பரப்பிய 4 நபர்களை தேடி டெல்லி விரைந்தது தனிப்படை.

சென்னை,

தமிழ்நாட்டில் கட்டுமான தொழில் முதல் தள்ளுவண்டி கடை வியாபாரம் வரையில் பீகார், மேற்கு வங்காளம் போன்ற வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பெருமளவில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாட்டில் வசிக்கும் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவின. வேறு சில மோதல் சம்பவங்களின் 'வீடியோ' காட்சிகளை தவறாக இணைத்து இப்படி பொய்யான தகவல் பரவியதால் வடமாநில தொழிலாளர்கள் பீதி அடைந்தனர்.

அவர்களில் பலர் தமிழ்நாட்டில் இருந்து வெளியேறவும் தொடங்கி உள்ளனர். தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வெளியான 'வீடியோ' விவகாரம் பீகார் சட்டசபையிலும் எதிரொலித்தது. இதுதொடர்பாக நேரில் ஆராய்வதற்கு அந்த மாநில அரசு அனைத்து கட்சி குழுவை அமைத்துள்ளது. இதற்கிடையே, "சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தாக்குதல் வீடியோ பதிவுகள் வதந்தி ஆகும். எனவே வடமாநில தொழிலாளர்கள் இதனை நம்ப வேண்டாம்" என்று போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு இந்தி மொழியில் சமூக வலைத்தளங்களில் பதிவு வெளியிட்டார்.

தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை. வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் அறிக்கை வாயிலாக எச்சரிக்கை விடுத்தார். இந்த நிலையில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக பொய் செய்தி பரப்பியது தொடர்பாக 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்தநிலையில், வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் வதந்தி பரப்பிய நபர்களை பிடிக்க டெல்லி, பீகார் சென்றுள்ளது தனிப்படை. 4 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட நபர்களை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story