கோபி அருகே குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்


கோபி அருகே குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
x

கோபி அருகே குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாைல மறியலில் ஈடுபட்டனர்.

ஈரோடு

கடத்தூர்

கோபி அருகே குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாைல மறியலில் ஈடுபட்டனர்.

குழாயில் உடைப்பு

கோபி அருகே மேவாணி ஊராட்சி 7-வது வார்டுக்கு உள்பட்ட மாரியம்மன் கோவில் வீதி, 8-வது வார்டுக்கு உள்பட்ட அண்ணா காலனி, கோபி-ஆப்பக்கூடல் பிரதான சாலை உள்ளிட்ட பகுதியில் சுமார் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்த பகுதிகள் உள்பட ஊராட்சி முழுவதும் அதே பகுதியில் உள்ள பவானி ஆறு அருகே போடப்பட்ட ஆழ்குழாயில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு, கிராமத்தில் உள்ள மேல் நிலை தொட்டியில் நிரப்பப்பட்டு ஊராட்சி முழுவதும் தண்ணீர் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் 7, 8-வது வார்டுகளில் குடிநீர் வழங்க போடப்பட்ட பிரதான குழாய் உள்ள பகுதியில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு மரம் ஒன்றை ஊராட்சி நிர்வாகம் வெட்டி அப்புறப்படுத்தி உள்ளது. இதனால் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டது.

சாலை மறியல்

இதன் காரணமாக ஊராட்சி பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு கடந்த 15 நாட்களாக குடிநீர் வழங்குவது முற்றிலும் தடைப்பட்டது. அந்த பகுதி பொதுமக்கள் குடிநீரின்றி மிகவும் அவதிப்பட்டு் வந்தனர்.

இந்த நிலையில் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று காலிக்குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்புள்ள ஆப்பக்்கூடல்-மேவானி ரோட்டில் ஒன்று திரண்டனர். பின்னர் ரோட்டில் உட்கார்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அதிகாரிகள் உறுதி

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மேவாணி ஊராட்சி மன்ற அதிகாரிகள், கோபி ஒன்றிய அதிகாரிகள், கோபி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் ஆகியோர் அங்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பொதுமக்கள் கூறும்போது, 'உடைந்த குடிநீர் குழாயை சரிசெய்து எங்கள் பகுதிகளுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

அதற்கு அதிகாரிகள், 'விரைவில் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்து உங்கள் பகுதியில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர். அதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் ஆப்பக்கூடல்-மேவானி ரோட்டில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story