500 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை தொடங்கியது - நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச்சென்ற பொதுமக்கள்


500 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை தொடங்கியது - நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச்சென்ற பொதுமக்கள்
x
தினத்தந்தி 1 Aug 2023 5:29 AM GMT (Updated: 1 Aug 2023 5:47 AM GMT)

தமிழகம் முழுவதும் 500 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை தொடங்கியது.

சென்னை,

அண்டை மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து குறைந்ததாலும், தென்மேற்கு பருவமழை காரணமாக தக்காளி பயிரிடுவது பாதிக்கப்பட்டதாலும், ஜூன் மாத இறுதியில் வெளிச்சந்தையில் தக்காளியின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.140 முதல் ரூ.160 வரை விற்பனை செய்யப்பட்டது.

தமிழகத்தில் தக்காளி விலையேற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர கூட்டுறவுத்துறையின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி முதற்கட்டமாக 302 ரேஷன் கடைகள் மூலம் தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருவதை கருத்தில் கொண்டு தற்போது தமிழகம் முழுவதும் 500 ரேஷன் கடைகளில் இன்று முதல் தக்காளி கிலோ ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று வரை 300 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 500 ஆக உயர்ந்துள்ளது. நபர் ஒருவருக்கு 1 கிலோ தக்காளி மட்டுமே வழங்கப்படுகிறது. சென்னையில் மலிவு விலையில் தக்காளி வாங்க பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கி செல்கின்றனர்.

சென்னையில் 100 ரேஷன் கடைகளிலும், கோவை, மதுரை, சேலம், திருச்சி மாவட்டங்களில் 20 கடைகளிலும்; செங்கல்பட்டு, ஈரோடு, தஞ்சாவூர், திருநெல்வேலி, திருவள்ளூர், தூத்துக்குடி, வேலூர் மாவட்டங்களில் 15 கடைகளிலும்; கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, காஞ்சீபுரம், கரூர், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகை, நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருப்பூர், திருவண்ணாமலை, விழுப்புரம், விருதுநகர் மாவட்டங்களில் 10 கடைகளிலும்; அரியலூர், கன்னியாகுமரி, நீலகிரி, ராணிப்பேட்டை, சிவகங்கை, தென்காசி, தேனி, திருப்பத்தூர், திருவாரூர் மாவட்டங்களில் 5 கடைகளிலும் என தமிழகம் முழுவதும் 500 ரேஷன் கடைகளில் 1-ந்தேதி (இன்று) முதல் தக்காளி கிலோ ஒன்றுக்கு ரூ.60 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.


Next Story