வேலூர் மீன் மார்க்கெட்டில் மீன்கள் விற்பனை மந்தம்

பிரதோஷத்தையொட்டி வேலூர் மீன் மார்க்கெட்டில் மீன்கள் விற்பனை குறைந்தது.
வேலூர் மீன்மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு கடலோர பகுதிகளில் இருந்து மீன்கள் கொண்டு வரப்படுகிறது.
அதைத்தவிர ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து ரெயில், டெம்போ உள்ளிட்ட வாகனங்களில் மீன்கள் விற்பனைக்காக வருகின்றன.
இங்கிருந்து ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு மீன்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. வேலூர் மீன்மார்க்கெட்டில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமையில் அசைவ பிரியர்களின் கூட்டம் அதிகமாக காணப்படும்.
அதிகளவு மீன்கள் விற்பனையாகும். ஆனால் இன்று பங்குனி மாத பிரதோஷம் என்பதால் வழக்கத்தைவிட கூட்டம் குறைவாக காணப்பட்டது. மீன்களின் விற்பனையும் மந்தமாக இருந்தது.
பெரும்பாலான மீன்களின் விலை கடந்த வாரத்தை போன்று மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டன. சிலவற்றின் விலை சிறிதளவு அதிகரித்து காணப்பட்டது.
ஒரு கிலோ வஞ்சிரம் மீன் ரூ.850-க்கும், இறால் ரூ.250 முதல் ரூ.300-க்கும், அயிலை, வவ்வால், கட்லா மீன்கள் ரூ.120-க்கும் விற்பனையானது.
சங்கரா மீன் ரூ.250 முதல் ரூ.300-க்கும், நெத்திலி ரூ.150-க்கும், நெய்மீன் ரூ.100 முதல் ரூ.120-க்கும், ஜிலேபி ரூ.80 முதல் ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டன.