சம்பா, தாளடி அறுவடை பணி தொடக்கம்


சம்பா, தாளடி அறுவடை பணி தொடக்கம்
x
தினத்தந்தி 21 Jan 2023 6:45 PM GMT (Updated: 21 Jan 2023 6:45 PM GMT)

மணல்மேடு பகுதியில் சம்பா மற்றும் தாளடி நெல் அறுவடை பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் நெல் விற்பனைக்காக விவசாயிகள் காத்திருக்கிறார்கள்.

மயிலாடுதுறை

மணல்மேடு:

மணல்மேடு பகுதியில் சம்பா மற்றும் தாளடி நெல் அறுவடை பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் நெல் விற்பனைக்காக விவசாயிகள் காத்திருக்கிறார்கள்.

நெல் அறுவடை

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு மற்றும் அதை சுற்றியுள்ள பட்டவர்த்தி, வில்லியநல்லூர், தலைஞாயிறு, திருவாளப்புத்தூர், சித்தமல்லி, கடலங்குடி, முடிகண்டநல்லூர், ஆத்தூர், காளி, கிழாய், வில்லிய நல்லூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இந்த ஆண்டு சம்பா மற்றும் தாளடி பயிர்கள் 30 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டது.

மணல்மேடு பகுதியில் பொங்கல் பண்டிகைக்கு முன்பு நெல் அறுவடைக்கு தயாராகி விட்டது. தற்போது பொங்கல் பண்டிகை முடிவடைந்த நிலையில் ஆங்காங்கே நெல் அறுவடை பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

எந்திரங்கள் மூலம்...

வில்லிய நல்லூர், தலைஞாயிறு, வடவஞ்சார், பட்டவர்த்தி உள்ளிட்ட இடங்களில் கடந்த சில நாட்களாக அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் பெய்த மழையால் ஒரு சில வயல்களில் நெல் தரையோடு சாய்ந்துள்ளது. பெரும்பாலும் நெல் அறுவடை எந்திரங்கள் மூலம் நடைபெற்று வருகிறது. பெல்ட் மூலம் இயங்கும் அறுவடை எந்திரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.2,500, டயர் மூலம் இயங்கும் எந்திரத்திற்கு ரூ.2 ஆயிரம் என வாடகை கட்டணம் வசூலிக்கப்படுகிறது இதற்கு தேவையான அறுவடை எந்திரங்கள் சேலம், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து லாரிகள் மூலம் கொண்டுவரப்பட்டு அறுவடை பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

கொள்முதல் நிலையங்கள்

அறுவடையான நெல்லை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்வதற்கு விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

விவசாயிகளின் தேவைக்கேற்ப நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.


Next Story