சனாதனம் குறித்த பேச்சு; நேரத்தை வீணடிக்கும் செயல்களில் ஈடுபட வேண்டாம் - உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்


சனாதனம் குறித்த பேச்சு; நேரத்தை வீணடிக்கும் செயல்களில் ஈடுபட வேண்டாம் - உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்
x

தன் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளை சட்டப்படி சந்திக்க உள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துக்கு பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதற்கிடையே அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு, ஓய்வுபெற்ற நீதிபதிகள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட 262 பேர் கடிதம் எழுதினர்.

மேலும் சனாதன பேச்சு தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் உள்ள சிவில் லைன்ஸ் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் உதயநிதியின் கருத்துக்கு ஆதரவாக பேசிய கர்நாடக மந்திரி பிரியங் கார்கே மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சனாதனம் குறித்த பேச்சு தொடர்பாக நேரத்தை வீணடிக்கும் செயல்களில் ஈடுபட வேண்டாம் என தி.மு.க. தொண்டர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சாமியாரின் மீது வழக்கு போடுவது, உருவ பொம்மையை எரிப்பது போன்ற நேரத்தை வீணடிக்கும் செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

தி.மு.க. இளைஞரணியின் 2-வது மாநில மாநாட்டு பணிகள், மக்களவை தேர்தல் பணிகள் என ஏராளமான பணிகள் உள்ளதாகவும், தன் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளை சட்டப்படி சந்திக்க உள்ளதாகவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Next Story