பங்குனி மாத சர்வ அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட குவிந்த பக்தர்கள்


பங்குனி மாத சர்வ அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட குவிந்த பக்தர்கள்
x
தினத்தந்தி 21 March 2023 6:45 PM GMT (Updated: 21 March 2023 6:45 PM GMT)

பங்குனி மாத சர்வ அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட பக்தர்கள் குவிந்தனர்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

பங்குனி மாத சர்வ அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட பக்தர்கள் குவிந்தனர்.

அக்னி தீர்த்த கடல்

ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆடி, தை அமாவாசை மற்றும் புரட்டாசி மாத மகாளய அமாவாசை, சர்வ அமாவாசை நாட்களில் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கும். குறிப்பாக இறந்து போன தங்களது முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடைய இது போன்ற அமாவாசை நாட்களில் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி கடற்கரையில் அமர்ந்து தர்ப்பண பூஜை செய்து வழிபடுவது உகந்த நாளாகும்.

இந்தநிலையில் பங்குனி மாத சர்வ அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடுவதற்காக நேற்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இவ்வாறு கடலில் நீராடிய பக்தர்கள் இறந்து போன தங்களது முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டி கடற்கரையில் அமர்ந்து புரோகிதர்கள் மூலம் திதி தர்ப்பணபூஜை செய்தும் வழிபாடு நடத்தினர்.

சாமி தரிசனம்

இதைதொடர்ந்து கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளிலும் புனித நீராடினர். பின்னர் கோவிலில் உள்ள சாமி மற்றும் அம்பாளை தரிசனம் செய்ய பிரகாரத்தில் நீண்டவரிசையில் நின்று தரிசனம் செய்து சென்றனர். கடந்த சில வாரங்களாகவே ராமேசுவரம் கோவிலில் பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்து வந்த நிலையில் பங்குனி மாத சர்வ அமாவாசையான நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story