எல்.கே.அத்வானிக்கு 'பாரத ரத்னா' விருது: சசிகலா வாழ்த்து


எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது: சசிகலா வாழ்த்து
x
தினத்தந்தி 4 Feb 2024 7:24 AM GMT (Updated: 4 Feb 2024 7:29 AM GMT)

பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ள எல்.கே.அத்வானிக்கு சசிகலா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

சசிகலா வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது:-

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி அவர்களுக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது அறிவித்துள்ளதற்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். எல்.கே.அத்வானி தனது 14-வது வயதிலேயே பொது சேவைகளில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர். இந்திய ஒற்றுமைக்காக அயராது பாடுபட்டவர். மேலும், இந்திய தேசத்திற்காக அவர் ஆற்றிய அரும்பணிகள் மிகவும் சிறப்பு வாய்ந்தது. கடந்த 2015 ஆம் ஆண்டு எல்.கே. அத்வானிக்கு பத்ம விபூசன் விருது வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டு இருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது.

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மீது எல்.கே.அத்வானி மிகுந்த அன்பையும், மாறாப்பற்றினையும் கொண்டிருந்ததை இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அதேபோன்று, எல்.கே.அத்வானி போயஸ் கார்டன் இல்லத்தில் ஜெயலலிதாவை நேரில் சந்தித்ததையும், அவர்களுக்கு விருந்து அளித்து உபசரித்ததையும் இந்நேரத்தில் எண்ணி பெருமிதம் அடைகிறேன்.

இந்த மகிழ்ச்சியான தருணத்தில் எல்.கே.அத்வானி அவர்கள் நீண்ட ஆயுளோடும், நல்ல சுகத்தோடும், மகிழ்ச்சியோடும், நூறாண்டுகளை கடந்தும், பெருவாழ்வு வாழ வேண்டுமென எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


Next Story