பட்டியல் இனமக்கள் கோவிலுக்குள் சென்று வழிபாடு செய்ய அனுமதி - மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு


பட்டியல் இனமக்கள் கோவிலுக்குள் சென்று வழிபாடு செய்ய அனுமதி - மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு
x

பட்டியல் இனமக்கள் கோவிலுக்குள் சென்று வழிபாடு செய்ய அனுமதி வழங்கி மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

தீண்டாமையை கடைபிடிப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி சித்தரேவு கிராமத்தை சேர்ந்த மணி மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில்,பழனி அருகே சித்தரேவு கிராமத்தில் 250-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள உச்சி காளியம்மன் கோவில், செல்வ விநாயகர் கோவிலில் பொதுமக்கள் வழிபட்டு வந்திருந்தனர்.

கடந்த 10 வருடகாலமாக பட்டியலினத்தவர்களுக்கு கோவிலுக்குள் சென்று வழிபடவிடாமல் உயர் சாதியை சேர்ந்த சிலர் தீண்டாமையை கடைபித்து வருகின்றனர். இதனை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் எங்கள் சாதி மக்களை கோவிலுக்குள் நுழைய விடாமல் தீண்டாமையை கடைப்பிடித்து வருகின்றனர்.

இது சட்டவிரோதமானது. எனவே தீண்டாமையை கடைபிடிக்கும் இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் சமூக மக்கள் வழிபாடு செய்ய அனுமதித்து உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதி மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அரசின் மூத்த வழக்கறிஞர் திலக்குமார் ஆஜராகி, கடவுள் அனைவருக்கும் பொதுவானவர். சாமி கும்பிடுவதில் எந்த பாகுபாடும் பார்க்கக்கூடாது என்பதில் அரசு தெளிவாக உள்ளது.

இதுபோன்று சட்டத்தை மீறுபவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிபதிகளிடம் தெரிவித்தார்.

இதனை பதிவு செய்து நீதிபதிகள், பட்டியல் இன மக்கள் செல்ல விநாயகர் மற்றும் உச்சி காளியம்மன் கோவிலுக்குள் சென்று வழிபட அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தனர். மேலும், இந்த விவகாரம் குறித்து மாவட்ட கலெக்டர் எழுத்துப்பூர்வமான பதிலை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.


Next Story