கள்ளக்குறிச்சியில் அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி: கலெக்டர் ஷ்ரவன்குமார் தொடங்கி வைத்தார்


கள்ளக்குறிச்சியில் அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி: கலெக்டர் ஷ்ரவன்குமார் தொடங்கி வைத்தார்
x

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டியை கலெக்டர் ஷ்ரவன்குமார் தொடங்கி வைத்தார்.

கள்ளக்குறிச்சி

நெடுந்தூர ஓட்டப்போட்டி

கள்ளக்குறிச்சியில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறையின் சார்பில் அறிஞர் அண்ணா நெடுந்தூர ஒட்டப்போட்டி நடைபெற்றது. இதற்கு சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். விழாவில் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் கலந்து கொண்டு கொடியசைத்து நெடுந்தூர ஓட்டப்போட்டியை தொடங்கி வைத்தார்.

இதில் 17 முதல் 25 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் ஆண்களுக்கு 8 கிலோமீட்டர் தூரம், பெண்களுக்கு 5 கிலோமீட்டர் தூரம், 25 வயதுக்கு மேற்பட்டோருக்கான பிரிவில் ஆண்களுக்கு 10 கிலோமீட்டர் தூரம், பெண்களுக்கு 5 கிலோமீட்டர் தூரம் என 2 பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது.

போட்டியில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விளையாடினர். இப்போட்டியானது கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்கி கச்சிராயப்பாளையம் செல்லும் சாலை வழியாக ஏர்வாய்ப்பட்டினம் பேருந்து நிறுத்தத்தில் முடிவடைந்தது.

வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

இதில் வெற்றி பெற்ற ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக பரிசுகள் வழங்கப்பட்டது. முதல் பரிசு ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரமும் மற்றும் ஆறுதல் பரிசாக 4 முதல் 10 இடங்களைப் பிடித்த ஆண்கள் மற்றும் பெண்கள் 28 பேருக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.

இதில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அலுவலர் ஷெர்லி ஏஞ்சலா, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிரமணி, தி.மு.க வடக்கு மாவட்ட துணை செயலாளர் வாணியந்தல்.ஆறுமுகம் உள்பட மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர், உடற்கல்வி ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். 


Next Story