மழைநீர் சேகரிப்பு குறித்த பள்ளி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பேரணி - கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்


மழைநீர் சேகரிப்பு குறித்த பள்ளி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பேரணி - கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
x

மழைநீர் சேகரிப்பு குறித்த பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவ மாணவியர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியை மாவட்ட கலெக்டர் த.பிரபு சங்கர் கொடி அசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக மாவட்ட கலெக்டர் பேரணியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவியர்களிடம் தண்ணீரின் அவசியம் மற்றும் மழைநீர் சேகரிப்பு குறித்து கேட்டறிந்து அறிவுரைகளை வழங்கி பாராட்டினார்.

பேரணியில் மாணவ, மாணவியர்கள் முக்கிய வீதிகள் வழியாக மழை நீர் சேகரிப்பதன் அவசியம் குறித்து வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தினர்.

அதில், வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை நிறுவி பராமரிக்க வேண்டும், கண்மாய்கள், குளங்கள், ஊரணிகள், ஏரிகள், நீராதார கட்டமைப்புகளை ஆழப்படுத்தி மேம்படுத்த வேண்டும், வீடுகளில் மழைநீர் சேகரிப்பு வீட்டுக் கூரையை மழைக்காலத்திற்கு முன் சுத்தம் செய்து, காய்ந்த இலை சருகுகளை அப்புறப்படுத்த வேண்டும், மழைநீர் சேமிப்பு தொட்டி 1000 லிட்டர் அளவுள்ள சேமிப்புக்கு 4 கிராம் பிளீச்சிங் பவுடர் கரைசலை சேமிக்கப்பட்ட மழைநீரில் கலக்க வேண்டும்,

மழைநீர் கொண்டு வரும் குழாய்களில் அடைப்புகளை நீக்கி பழுதுகளை சரிசெய்ய வேண்டும் என கோஷங்களை எழுப்பி பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

தொடர்ந்து மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு காணொளி வாகனம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, வாகனத்தை மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார். இதில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவியர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story