ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு


ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு
x

கும்பகோணம் அருகே ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தார்.

தஞ்சாவூர்

கும்பகோணம் அருகே ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தார்.

பள்ளி மாணவன்

கும்பகோணம் அருகே மூப்பக்கோவில் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய மகன் பூவரசன் (வயது14). இவர் கும்பகோணம் பகுதியில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் பூவரசன் 2 நாட்களுக்கு முன்பு தனது நண்பர்களுடன் கொட்டையூர் பகுதியில் காவிரி ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். ஆற்றில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தபோது தண்ணீர் வேகத்தில் பூவரசன் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சக நண்பர்கள் பூவரசன் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பூவரசன் குடும்பத்தினர் ஆற்றங்கரை பகுதிக்கு ஓடிவந்தனர். மேலும் கும்பகோணம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இறந்த நிலையில்...

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பூவரசனை தேடும் பணியை தொடங்கினர். ஆனால் இரவு வரை பூவரசனை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை பெரும்பாண்டி வாய்க்கால் பிரிவு முனீஸ்வரன் படித்துறை பகுதியில் பூவரசன் இறந்த நிலையில் அவருடைய உடல் கரை ஒதுங்கியது.

இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று பூவரசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் கும்பகோணம் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story