மாடுமுட்டியதில் பள்ளி மாணவன் படுகாயம்


மாடுமுட்டியதில் பள்ளி மாணவன் படுகாயம்
x
தினத்தந்தி 14 Dec 2022 6:45 PM GMT (Updated: 14 Dec 2022 6:46 PM GMT)

சீர்காழியில் சாலையில் நடந்து சென்ற மாணவனை மாடு முட்டியது. இதில் படுகாயம் அடைந்த அவர், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை

சீர்காழி:

சீர்காழியில் சாலையில் நடந்து சென்ற மாணவனை மாடு முட்டியது. இதில் படுகாயம் அடைந்த அவர், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாலையில் சுற்றித்திரிகின்றன

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்குட்பட்ட மயிலாடுதுறை சாலை, புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், புழுகார்பேட்டை தெரு, தேர் மேல வீதி, சிதம்பரம் சாலை, ஈசானிய தெரு, தென்பாதி, ெரயில்வே ரோடு, கொள்ளிடம் முக்கூட்டு உள்ளிட்ட பிரதான சாலைகளில் காலை மற்றும் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக ஏராளமான கால்நடைகள் சுற்றித்திரிகின்றன.இதன் காரணமாக அடிக்கடி விபத்துகளும், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. மேலும் நடந்து செல்பவர்களை மாடுகள் அவ்வப்போது முட்டி வருகிறது.

மாணவனை மாடு முட்டியது

இதுகுறித்து சீர்காழி நகர் பகுதி பொதுமக்கள் தொடர்ந்து நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் செய்து வருகின்றனர். சீர்காழி தென்பாதியை சேர்ந்த நித்திஷ்(வயது16) என்பவர் தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறான். மாணவன் நேற்று காலை பள்ளிக்கு நடந்து சென்ற கொண்டிருந்தான்.அப்போது சாலையில் நின்றுகொண்டிருந்த மாடு ஒன்று நித்திசை முட்டி கீழே தள்ளியது. இதில் படுகாயம் அடைந்த மாணவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்

சீர்காழி நகர் பகுதியில் வாகன ஓட்டிகளுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக சாலையில் சுற்றித்திரியும் மாடு உள்ளிட்ட கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story