தண்டையார்பேட்டையில் பஸ்சில் பள்ளி மாணவர்கள் ரகளை; கண்டக்டரை பீர் பாட்டிலால் தாக்க முயற்சி


தண்டையார்பேட்டையில் பஸ்சில் பள்ளி மாணவர்கள் ரகளை; கண்டக்டரை பீர் பாட்டிலால் தாக்க முயற்சி
x

பஸ்சில் ரகளையில் ஈடுபட்டதை கண்டித்த கண்டக்டரை பீர் பாட்டிலால் தாக்க முயன்ற பள்ளி மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவள்ளூர்

பள்ளி மாணவர்கள் ரகளை

சென்னை பிராட்வேயில் இருந்து தண்டையார்பேட்டை ஐ.ஓ.சி.க்கு நேற்று முன்தினம் மாலை மாநகர பஸ்(தடம் எண் 44) சென்றது. பஸ்சை டிரைவர் தயானந்த மூர்த்தி (வயது 57) என்பவர் ஓட்டினார். கண்டக்டராக விழுப்புரம் மாவட்டம் திருவண்ணை டி.கிராமத்தை சேர்ந்த சிவசங்கரன் (39) பணியில் இருந்தார்.தண்டையார்பேட்டை தபால் நிலையம் பஸ் நிறுத்தத்தில் பஸ் நின்றபோது பள்ளி மாணவர்கள் 5 பேர் பஸ்சில் ஏறினார். அவர்கள் பஸ்சின் பின்பக்க படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தனர். அப்போது மாணவர்கள், பயணிகளுக்கு தொல்லை கொடுக்கும் வகையில் ரகளையில் ஈடுபட்டனர்.

பீர்பாட்டிலால் தாக்க முயற்சி

தண்டையார்பேட்டை மெட்ரோ ரெயில் நிலைய பஸ் நிறுத்தத்தில் பஸ் நின்றபோது, ரகளையில் ஈடுபட்ட பள்ளி மாணவர்களை கண்டக்டர் சிவசங்கரன் கண்டித்தார். அப்போது பள்ளி மாணவர்கள், அங்கு கிடந்த பீர்பாட்டிைல எடுத்து கண்டக்டர் சிவசங்கரனை தாக்க முயன்றனர். அதனை அவர் தடுத்ததால், பஸ் படிக்கட்டில் பீர்பாட்டிலை வீசி உடைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதையடுத்து கண்டக்டர் சிவசங்கரன், பஸ்சின் முன்புறம் நின்று இது தொடர்பாக உடைந்த பீர்பாட்டிலை காட்டி மாணவர்களை செயலை சுட்டிக்காட்டி வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

மேலும் இதுபற்றி கண்டக்டர் சிவசங்கரன் அளித்த புகாரின்பேரில் தண்டையார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பள்ளி மாணவர்களை தேடி வருகின்றனர்.


Next Story