அரசு பஸ் டிரைவருக்கு ஓராண்டு சிறை - கோர்ட்டு தீர்ப்பு


அரசு பஸ் டிரைவருக்கு ஓராண்டு சிறை - கோர்ட்டு தீர்ப்பு
x

கடலூர் அருகே விபத்தில் பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கில் அரசு பஸ் டிரைவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்து உள்ளது.

கடலூர்


கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள எடையார்குப்பம் பலாப்பட்டு காலனியை சேர்ந்தவர் அல்லிமுத்து. இவரது மகள் தனலட்சுமி (வயது 16). இவர் சி.என்.பாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2018-ம் ஆண்டு எடையார்குப்பத்தில் இருந்து கடலூர் நோக்கி சென்ற அரசு பஸ்சில் ஏறி, பள்ளிக்கூடத்திற்கு புறப்பட்டார்.

சி.என்.பாளையம் அருகே கொஞ்சிக்குப்பம் பஸ் நிறுத்தம் அருகில் வந்த போது டிரைவர் திடீரென பிரேக் பிடித்ததில் தனலட்சுமி பஸ்சில் இருந்து தவறி விழுந்தார். இதில் பஸ்சின் பின்பக்க சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியதில் தனலட்சுமி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்த புகாரின் பேரில் மேல்மாம்பட்டை சேர்ந்த பஸ் டிரைவர் மாயகிருஷ்ணன்(42) மீது நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு கடலூர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி வனஜா இன்று தீர்ப்பு அளித்தார்.

அதில் விபத்துக்கு காரணமான மாயகிருஷ்ணனுக்கு 14 மாதங்கள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கவுதமன் ஆஜராகி வாதாடினார்.


Next Story