நாளை பள்ளிகள் திறப்பு..! அமைச்சர் அன்பில் மகேஷ் கொடுத்த முக்கிய அறிவிப்புகள்


நாளை பள்ளிகள் திறப்பு..! அமைச்சர் அன்பில் மகேஷ் கொடுத்த முக்கிய அறிவிப்புகள்
x

நாளை முதல் 20 நாட்களுக்குள் புத்தகம், புத்தகப்பை, சீருடைகள் வழங்கப்படுமென அமைச்சர் அன்பில்மகேஷ் தெரிவித்தார்.

சென்னை,

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு 1 முதல் 10 வரையிலான பள்ளிகளுக்கு நாளை வகுப்புகள் தொடங்குகின்றது. இந்த நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது,

நாளை முதல் பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து தொடங்க உள்ளது. பள்ளி மாணவர்களுக்கு நாளை முதல் 20 நாட்களுக்குள் புத்தகம், புத்தகப்பை, சீருடைகள் வழங்கப்படும்.

மாணவர்களுக்கு சீருடையில் எவ்வித மாற்றமும் கொண்டுவரப்போவது கிடையாது. முகக்கவசம் கட்டாயம் என்ற அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு பின் கொரோனா விதிமுறைகள் முறையாக பின்பற்றபடும்.

பள்ளி திறப்பதற்கு முன்னதாக பள்ளிக்கூட வளாகம், உணவுக்கூடம், கழிப்பறைகள் சுத்தம் போன்றவை குறித்து வலியுறுத்திய பிறகே பள்ளிகள் திறக்கப்படுகிறது. எனவே வகுப்பறைகள் மாணவர்களுக்கு பாதுகாப்பான முறையில் இருக்கும்.

பள்ளிகள் திறப்பின்போது முதல் ஐந்து நாட்கள் நல்லொழுக்கத்திற்கான வகுப்புகள் நடத்தப்படும். பள்ளிக்கட்டணம் உடனடியாக கட்ட சொல்லி மாணவர்களை பள்ளி நிர்வாக நிர்பந்திக்ககூடாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பேசினார்.


Next Story