தியாகராஜர் கோவில் கோபுரங்களில் செடிகள் முளைப்பதால் சிதைந்து வரும் சிற்பங்கள்


திருவாரூர் தியாகராஜர் கோவில் கோபுரங்களில் செடிகள் முளைத்து சிற்பங்களை சிதைத்து வருகிறது. இந்த செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்

திருவாரூர் தியாகராஜர் கோவில் கோபுரங்களில் செடிகள் முளைத்து சிற்பங்களை சிதைத்து வருகிறது. இந்த செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தியாகராஜர் கோவில்

தமிழகத்தில் சைவ கோவில்களில் தோன்றிய வரலாறு கணக்கிட முடியாத மிகவும் பழமை வாய்ந்தது திருவாரூர் தியாகராஜர் கோவில். இத்தலம் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது.

அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரால் பாடல் பெற்ற தலமாகும். இந்த கோவிலுக்கு திரளான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

ஆழித்தர்

இந்த கோவிலில் சிறப்புக்கு மணி மகுடமாக திகழ்வது ஆழித்தேர். ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்கிற பெருமைமிக்கது.

இந்த சிறப்புமிக்க கோவில் கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ந் தேதி ரூ.3 கோடியே 18 லட்சம் அரசு நிதி ஒதுக்கீடு செய்தும், உபயதாரர்கள் பங்களிப்புடன் குடமுழுக்கு நடந்தது.

இந்த கோவிலில் 4 திசைகளிலும் உள்ள பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள கோபுரங்களில் கலைநயத்துடன் அழகிய சிற்பங்கள் வடிவைக்கப்பட்டுள்ளன. கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்ற ஐதீகம் இருந்து வருகிறது.

கோபுரங்களில் முளைக்கும் செடிகள்

இந்த ராஜகோபுரம் மற்றும் தெற்கு கோபுரம் உள்ளிட்ட கோபுரங்களில் செடிகள் முளைத்து மரங்களாக வளர்த்துள்ளது.

செழிப்பாக வளரும் இந்த மரங்களால் கோபுரங்களில் இடம் பெற்றுள்ள கற்சிற்பங்கள், சுதையால் செய்யப்பட்ட சிற்பங்கள் சிதையும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த செடிகள், சிறுமரங்களை அகற்ற கோவில் நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது வேதனைக்குரியது.

அகற்ற வேண்டும்

பிரசித்த பெற்ற தியாகராஜர் கோவிலின் ராஜகோபுரம் உள்ளிட்ட பல்வேறு கோபுரங்களில் கட்டுமானங்கள் சிதைவு ஏற்படுத்துவதையும், கலைநயமிக்க சிலைகள் சேதமடைவதையும் தடுக்க செடிகள், சிறுமரங்களை உடனடியாக அகற்றி கோபுரங்களை பாதுகாத்திட கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story