மாமல்லபுரத்தில் கடல் சீற்றம்


மாமல்லபுரத்தில் கடல் சீற்றம்
x

மாமல்லபுரத்தில் பலத்த கடல் சீற்றம் காரணமாக மணல் பரப்பில் 5 அடி உயரத்திற்கு கடல் அரிப்பு ஏற்பட்டது.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டத்தில் யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட உலக புராதன நகரமாக திகழ்கிறது, மாமல்லபுரம். இங்குள்ள கடற்கரைப்பகுதி மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையை போன்று பரந்து விரிந்து காணப்படுகிறது. இங்கு மீனவர் குடியிருப்புப்பகுதியில் உள்ள விடுதிகளிலும், நட்சத்திர ஓட்டல்களிலும் தங்கும் வெளிநாட்டு, உள்நாட்டுப்பயணிகள் கடற்கரை மணல் பரப்பில் பொழுதை போக்குவர். அவர்கள் கடலில் குளித்து மகிழ்ச்சியில் ஈடுபடுவதும் உண்டு. மாமல்லபுரத்தில் எப்போதும் இல்லாத வகையில் நேற்று கடல் பலத்த சீற்றத்துடன் காணப்பட்டது.

பலத்த கடல் சீற்றத்தால் கடல் அலைகள் 20 அடி தூரத்துக்கு முன்னோக்கி வந்தது. அதனால் கரைப்பகுதியில் 5 அடி உயரத்திற்கு கடல் அரிப்பு ஏற்பட்டது. இதனால் கரைப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் அந்தரத்தில் தொங்கியது. நேற்றைய கடல் சீற்றம் மற்றும் கடல் அரிப்பால் கடற்கரைப்பகுதியில் சுற்றுலாப்பயணிகள் யாரும் கடலில் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. குறிப்பாக கடற்கரை கோயிலின் வடக்குப்பக்க கரைப்பகுதியில் உள்ள மகிஷாசூரமர்த்தினி குடை வரை கடல் நீர் முன்னோக்கி வந்துள்ளது.

மேலும் நேற்று கடல் சீற்றம் அதிகமாகக் காணப்பட்ட போதும், சுற்றுலா வந்த வாலிபர்கள் சிலர் கடற்கரை கோயிலுக்கு பின்பக்கம் உள்ள பாறைகள் மீது ஏறி நின்று ராட்சத அலை, பாறைகள் மீது மோதும் காட்சியை ஆபத்தை உணராமல் செல்பி எடுத்து கொண்டிருந்தனர்.

இதுகுறித்து மீனவர்கள் கூறும்போது:-

"தற்போது கடலில் ஏற்படும் பருவமாற்றம், சீதோஷ்ண நிலையை யாராலும் கணிக்க முடியவில்லை. எப்போது சுழல் காற்று வீசும், எப்போது கடல் சீற்றம் ஏற்படும் என்பதை கணிக்க முடியாமல் நாங்கள் திணறுகிறோம். இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் அடிக்கடி பாதிக்கப்படுகிறது. கடல் சீற்றம் காரணமாக கிழக்குக்கடற்கரை சாலையில் உள்ள மாமல்லபுரம் மீனவர் பகுதி அதிக பாதிப்புக்கு உள்ளாகிறது. கடல் சீற்றம் ஏற்படாத வகையில், தமிழக அரசு கரைப்பகுதியில் தூண்டில் வளைவுகள் அல்லது பாறைக்கற்களை கொட்டி கடற்கரைப்பகுதியிைய பாதுகாத்து எங்களது வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்" என்றனர்.


Next Story