போலீஸ்காரர் குடும்பத்திற்கு விபத்து நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி


போலீஸ்காரர் குடும்பத்திற்கு விபத்து நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
x

பெரியகுளத்தில் போலீஸ்காரர் குடும்பத்திற்கு விபத்து நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

தேனி

பெரியகுளம் அருகே உள்ள பண்ணைப்புரத்தை சேர்ந்தவர் வனராஜன். இவர் ராமநாதபுரம் மாவட்டத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 1998-ம் ஆண்டு தேர்தல் பணிக்காக கோவைக்கு சென்றார். பின்னர் பணியை முடித்துவிட்டு, கோவை பஸ் நிலையத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த அரசு பஸ் ஒன்று அவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே வனராஜன் பலியானார்.

இதையடுத்து வனராஜனின் மகன்களான செல்வக்குமார், சதீஷ்குமார் ஆகியோர் விபத்து நஷ்டஈடு கேட்டு பெரியகுளத்தில் உள்ள மாவட்ட கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த கோர்ட்டு நீதிபதி, வனராஜனின் குடும்பத்திற்கு கோவை மண்டல அரசு போக்குவரத்துக்கழகம் ரூ.14 லட்சத்து 60 ஆயிரம் நஷ்டஈடாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதையடுத்து அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் வனராஜனின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சத்து 62 ஆயிரத்தை வழங்கப்பட்டது. ஆனால் மீதமுள்ள இழப்பீட்டு தொகையை வழங்கவில்லை.

இதைத்தொடர்ந்து வனராஜனின் மகன்கள், பெரியகுளம் கோர்ட்டில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சிங்கராஜ், கோவை மண்டல அரசு போக்குவரத்துக்கழக பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன்படி, இன்று பெரியகுளத்திற்கு வந்த கோவை மண்டல அரசு போக்குவரத்துக்கழக அரசு பஸ்சை கோர்ட்டு அமீனா ரமேஷ் மற்றும் ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.


Next Story