விபத்தில் பலியான கொத்தனார் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி


விபத்தில் பலியான கொத்தனார் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
x

வேடசந்தூரில் விபத்தில் பலியான கொத்தனார் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி ெசய்யப்பட்டது.

திண்டுக்கல்

வடமதுரை அருகே உள்ள சீலப்பாடிகளத்தை சேர்ந்தவர் வீராசாமி (வயது 48). கொத்தனார். இவரது மனைவி ஜோதியம்மாள் (43). இவர்கள் 2 பேரும் கடந்த 2016-ம் ஆண்டு மொபட்டில் திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தனர். திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தம்பிநாயக்கன்புதுப்பட்டி அருகே அவர்கள் வந்தபோது, பின்னால் வந்த அரசு பஸ் ஒன்று மொபட் மீது மோதியது. இதில் மொபட்டில் வந்த 2 பேரும் படுகாயம் அடைந்தனர். இதில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வீராசாமி சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். இதுகுறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே வீராசாமி குடும்பத்தினர் தரப்பில் இழப்பீடு கேட்டு வேடசந்தூர் சப்-கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மதுரை அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் பாதிக்கப்பட்ட தொழிலாளியின் குடும்பத்திற்கு ரூ.7½ லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். ஆனால் கோர்ட்டு உத்தரவுபடி அரசு போக்குவரத்துக்கழகம் இழப்பீட்டு தொகையை வழங்கவில்லை.

இதையடுத்து வீராசாமி குடும்பத்தினர் சார்பில் வேடசந்தூர் சப்-கோர்ட்டில் நிறைவேற்றல் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சரவணகுமார், மதுரை அரசு போக்குவரத்துக்கழகத்திற்கு சொந்தமான பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன்படி, இன்று வேடசந்தூர் பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திருச்செந்தூருக்கு செல்லும் அரசு பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்து, அதனை கோர்ட்டு வளாகத்தில் நிறுத்தினர்.


Next Story