செல்வகுமாரசுவாமி, குப்பண்ணசுவாமி, அத்தனூரம்மன் கோவில் கும்பாபிஷேகம்


செல்வகுமாரசுவாமி, குப்பண்ணசுவாமி, அத்தனூரம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x

புள்ளாக்கவுண்டன்பாளையத்தில் உள்ள செல்வகுமாரசுவாமி, குப்பண்ணசுவாமி, அத்தனூரம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கரூர்

திருப்பணிகள் நிறைவு

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், சின்னதாராபுரம் அருகே உள்ள புள்ளாக்கவுண்டன்பாளையத்தில் விநாயகர், செல்வகுமாரசுவாமி, குப்பண்ண சுவாமி, அத்தனூரம்மன், மகாமுனி சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் தனிப்பெரும் தெய்வமாக விளங்கும் சிவபெருமானின் ஆறுமுகத்திலிருந்து தீய சக்திகளை அகற்றவும், முப்பத்து முக்கோடி தேவர்களின் குறை நீங்க தீப்பொறி வடிவமாக தோன்றி வெல்ல முடியாத பகையெல்லாம் வென்றிட, முத்தமிழுக்கும் தலைவனாகி மூவுலகிற்கும் இறைவனாகிய செல்வகுமாரசுவாமி என்ற திருநாமம் கொண்டு புள்ளாக்கவுண்டன்பாளையம் பகுதிவாழ் மக்கள் வாழையடி வாழையாக வரம் பெற்று வளமுடன் வாழ்ந்து வருகின்றனர்.

மேலும் சுதை வடிவம் கொண்டிருந்த குப்பண்ணசுவாமியின் திருவுருவத்தை ஆண்டவனின் அருள் வாக்கிற்கிணங்க திருவுருவச்சிலையை புதியதாக கல் விக்ரஹமாக வடிவமைத்தும், வர்ணங்கள் தீட்டியும், புத்தம் புது பொலிவுடன் திருப்பணிகள் நிறைவு பெற்று கும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்யப்பட்டது.

கும்பாபிஷேகம்

இதையொட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை மகா கணபதி ஹோமமும், விமான கோபுர கலசங்கள் அமைத்தல், குப்பண்ண சுவாமி கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து காவிரியில் இருந்து தீர்த்தம் கொண்டு வந்தனர். மாலையில் முளைப்பாரி எடுத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து முதல் கால யாகசாலை பூஜைகளும், யந்திரம் வைத்து சுவாமி நிலை நாட்டுதல், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் ஆகியவை நடைபெற்றன.

இதையடுத்து நேற்று முன்தினம் அதிகாலை 5 மணிக்கு விநாயகர் பூஜை, புண்யாகம்மூல மந்திர ஹோமம், தொடர்ந்து 2-ம் கால யாக சாலை பூஜையும் நடைபெற்றது. பின்னர் விமான கோபுர கலசத்திற்கும், கருவறையில் வீற்றிருக்கும் ஊர் விநாயகப்பெருமானுக்கும், செல்வகுமாரசுவாமி கோவில் விமான கோபுர கலசத்திற்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கருவறையில் வீற்றிருக்கும் செல்வக்கணபதி, செல்வக்குமாரசுவாமி, குப்பண்ணசுவாமி, அத்தனூரம்மன், மகாமுனி முதலான தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மகா அபிஷேகமும், சாமி தரிசனமும், மகா தீபாராதனையும் நடைபெற்து.

பக்தர்கள் சாமி தரிசனம்

இதில் புள்ளாக்கவுண்டன்பாளைய குடிப்பாட்டு மக்களும், அதனை சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்த பொதுமக்களும், பக்தர்களும் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

இந்த கும்பாபிஷேக விழாவிற்கு அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. மொஞ்சனூர் பி.ஆர்.இளங்கோ, முன்னாள் மேற்கு மண்டல ஐ.ஜி.பாரி, கோவை ராயல் கேர் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் மாதேஸ்வரன் மற்றும் கல்குவாரி உரிமையாளர்கள், தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை புள்ளாக்கவுண்டன்பாளையம் கோவில் திருப்பணி குழு நிர்வாகிகள், கோவில் சார்ந்த குடிப்பாட்டு மக்கள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story