செந்தில்பாலாஜியை செய்ய வேண்டும்


செந்தில்பாலாஜியை செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 17 Jun 2023 6:45 PM GMT (Updated: 18 Jun 2023 6:39 AM GMT)

செந்தில்பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று காமராஜ் எம்.எல்.ஏ. பேசினார்.

திருவாரூர்

அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம்

நன்னிலத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் கிளை செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ரா.காமராஜ் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், அ.தி.மு.க.வுக்கு கிளைச்செயலாளர்களும், வார்டு செயலாளர்களும் ஆணிவேராக திகழ்கிறார்கள். கட்சியை மேலும் வலுப்படுத்தும் வகையில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. நிர்வாகிகள் தீவிரமாக உழைத்து இதனை வெற்றி பெறச்செய்ய வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் அடிப்படையிலேயே செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த கைதை பார்த்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதறுகிறார்.

ஆர்ப்பாட்டம்

அமலாக்கத்துறை என்பது தன்னாட்சியோடு செயல்படக்கூடிய அமைப்பு. இதில் யாரும் தலையிட முடியாது. ஆதாரம் இருந்தால் யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம். அவர்களது சொத்துக்களை முடக்கலாம் என்று அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

எனவே செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை சரி செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் வருகிற 21-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றார். இதில் ஒன்றியச்செயலாளர்கள் ராம.குணசேகரன், அன்பழகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் ராஜேந்திரன், பக்கிரிசாமி, பாலாஜி, புகழேந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story