ஆசிரியருக்கான இழப்பீட்டு தொகையை கோர்ட்டில் செலுத்திய செந்துறை தாசில்தார்


ஆசிரியருக்கான இழப்பீட்டு தொகையை கோர்ட்டில் செலுத்திய செந்துறை தாசில்தார்
x

ஆசிரியருக்கான இழப்பீட்டு தொகையை கோர்ட்டில் செந்துறை தாசில்தார் செலுத்தினார்.

அரியலூர்

நிலத்தை அளந்து காட்டவில்லை

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள மருவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வமணி. ஆசிரியரான இவர் கடந்த 13 ஆண்டுக்கு முன்பு தங்களது பூர்வீகமான நிலத்தை நான்கு புறமும் அளந்து அத்துக்காட்டுமாறு செந்துறை தாசில்தாரிடம் மனு கொடுத்துள்ளார். ஆனால் 1½ ஆண்டுகளாக பலமுறை நேரிலும், கடிதம் மூலமாகவும் கேட்டும் நிலம் அளந்து காட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து செல்வமணி அரியலூர் முதன்மை மாவட்ட உரிமையியல் கோர்ட்டில் கடந்த 2010-ம் ஆண்டு தாசில்தார் உள்பட 7 பேர் மீது வழக்கு தொடர்ந்தார்.

தீர்ப்பு

இதையடுத்து 7 ஆண்டுகள் நடைபெற்ற இந்த வழக்கில் கடந்த 7.3.2017 அன்று கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. அந்த தீர்ப்பில், செந்துறை தாசில்தார் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி இருக்கிறார். அவர்தான் இதற்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.

அதனால் பாதிக்கப்பட்ட செல்வமணிக்கு இழப்பீடாக ரூ.20 ஆயிரத்தை வழக்கு தொடர்ந்த தேதியான 3.11.2010-ந் தேதி முதல் பணத்தை கட்டி முடிக்கின்ற வரையில் அசலுடன் 9 சதவீதம் வட்டியையும், செலவுத்தொகையும் சேர்த்து வழங்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.

இழப்பீடு

ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக இந்த இழப்பீடு வழங்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து செல்வமணி செந்துறை கோர்ட்டில், இழப்பீடு தொகையை வழங்க உத்தரவிட வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏக்னஸ் ஜெபகிருபா, உடனடியாக செல்வமணிக்கு கோர்ட்டு உத்தரவின்படி இழப்பீடு பணத்தை வழங்க வேண்டும். இல்லை என்றால் ஜீப் ஜப்தி செய்யப்படும் என்று உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து செல்வமணிக்கு வழங்க வேண்டிய ரூ.49 ஆயிரத்து 700 இழப்பீட்டு தொகையை கோர்ட்டில் செந்துறை தாசில்தார் விக்டோரியா பாக்கியம் செலுத்தினார்.


Next Story