திருத்தணி கன்னிக்கோவில் அருகே சாலையில் கழிவுநீர்; வாகன ஓட்டிகள் அவதி


திருத்தணி கன்னிக்கோவில் அருகே சாலையில் கழிவுநீர்; வாகன ஓட்டிகள் அவதி
x

திருத்தணி கன்னிக்கோவில் அருகே, சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.

திருவள்ளூர்

சாலையில் கழிவுநீர்

திருத்தணி நகராட்சி இந்திராநகர் பகுதிக்கு உட்பட்ட கன்னிக்கோவில் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து கழிவு நீர் வெளியேறுவதற்கு கழிவுநீர் கால்வாய் சிறிது தூரம் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதி வழியாக திருத்தணி சோளிங்கர் மாநில நெடுஞ்சாலை செல்கிறது. இதன் வழியாக தினமும் நூற்றுக்கணக்கான வாகன ஓட்டிகள் மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த கிராம மக்கள் தங்கள் அன்றாட பணிக்காக திருத்தணி நகருக்கு வந்து, அங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இந்த சாலையில் திருத்தணி போலீஸ் நிலையமும் அமைந்துள்ளது.

வாகன ஓட்டிகள் அவதி

இந்நிலையில் சாலையோரம் சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால், கடந்த சில மாதங்களாக கன்னிக்கோவில் பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் திருத்தணி சோளிங்கர் செல்லும் மாநில சாலையில் வழிந்தோடுகிறது. இதனால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியர் என அனைத்து தரப்பினரும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அதனால் அப்பகுதியில் பொதுமக்களுக்கு அடிக்கடி காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

எனவே மாநில நெடுஞ்சாலையில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story